நல்லா டான்ஸ் ஆடிய இளைஞர்.. அடுத்த நொடி திடீரென மாரடைப்பால் சுருண்டு விழுந்து பலி.. ஷாக் சம்பவம்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் நன்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த ஷாக் சம்பவம் அரங்கேறி உள்ளது.
முன்பெல்லாம் மாரடைப்பு என்பது வயதானவர்களிடையே மட்டும் ஏற்படும் பாதிப்பாக இருந்தது. ஆனால், கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியிலும் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக கொரோனா பாதிப்பிற்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் கணிசமாகவே அதிகரித்துள்ளது. வழக்கம் போல வேலை செய்யும் இளைஞர்கள் திடீர் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
மாரடைப்பு: இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது ஆந்திராவில் மீண்டும் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் நகரில் இளைஞர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தர்மாவரம் கணேஷ் மண்டபம் என்ற பகுதியில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது இரண்டு இளைஞர்கள் நடனமாடிக் கொண்டு இருக்கிறார்கள். இருவரும் பயங்கர உற்சாகத்துடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். சுற்றி இருக்கும் நபர்களும் அவர்களை கை தட்டி உற்சாகம் செய்கிறார்கள். அப்போது அவர்களில் ஒருவர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
டான்ஸ் ஆடும்போது: இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 20) இரவு மாருதி நகரில் உள்ள விநாயக மண்டபம் என்ற இடத்தில் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த அந்த இளைஞர் 26 வயதான பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நடனமாடிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பிரசாத் சுருண்டு விழுந்தார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் பதறினர். அவர்கள் பிரசாத்தை எழுப்ப முயன்ற போதும் எழுந்திருக்கவில்லை.
இதையடுத்து அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக பிரசாத் உயிரிழந்த இந்த ஷாக் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நாட்டில் கொரோனா பரவல் முடிவுக்கு வந்த போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இளைஞர்களிடையே இதுபோல திடீர் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்தது ஏன் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
திடீர் மாரடைப்பு: அதேநேரம் நன்றாக இருந்த இளைஞர்களுக்கு திடீர் திடீரென மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்தே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி காசியாபாத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இளைஞர் ஒருவர் சரிந்து விழுந்த உயிரிழந்தார். ஜிம்மில் டிரெட் மில்லில் அந்த இளைஞர் நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த இளைஞர் கீழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இது போல இளைஞர்களுக்கு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்திய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக மத்திய அரசும் நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கமளித்திருந்தது. கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications