தீய நோக்கத்தில் ராகுல் குறித்து விசாரிக்கவில்லை: டெல்லி போலீஸ் கமிஷனர் விளக்கம்
டெல்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குறித்த தகவல்கள் கேட்டதில் எந்த தீய நோக்கமும் கிடையாது என டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
கட்சிப் பணிகளில் இருந்து தற்காலிக விடுப்பு பெற்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தற்போது எங்கிருக்கிறார் என்ற விபரத்தை தொடர்ந்து ரகசியமாக வைத்திருக்கிறது அக்கட்சி. இந்நிலையில், டெல்லியில் உள்ள ராகுலின் அலுவலகத்திற்கு சென்ற டெல்லி போலீசார், ராகுல்காந்தியின் தோற்றம், கண்களின் நிறம், தலைகேசம் குறித்து அவரது அலுவலத்தில் இருந்தவர்களிடம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ராகுலைக் காணவில்லை என எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், டெல்லி போலீசாரின் இச்செயல் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல்காந்தியின் அனைத்து விவரங்களும் மக்களவையின் இணையதளத்தில் இருக்கும்போது, அவரது அலுவலகத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விசாரணையில் உள்நோக்கம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார் டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸ்ஸி. அப்போது அவர் கூறியதாவது :-
" போலீசார் ராகுல் காந்தியை பற்றி மட்டும் விசாரிக்கவில்லை. முக்கிய பிரமுர்கள் குறித்து விசாரிக்கப்படும் வழக்கமான நடைமுறைதான் இது.
வீரப்ப மொய்லி, எல்.கே அத்வானி, சந்திரசேகர் ராவ் போன்ற சில முக்கிய பிரமுர்கள் இல்லத்திற்கும் போலீசார் சென்று இதே போன்ற விசாரணையை மேற்கொண்டனர். ராகுல் காந்தி குறித்த தகவல்கள் கேட்டதில் எந்த தீய நோக்கமும் கிடையாது.
மார்ச் 12 ஆம் தேதி இரண்டு போலீசார் ராகுல் காந்தியின் இல்லத்துக்கு சென்று அவரது அடையாளங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதேநாளில் வீரப்ப மொய்லி மற்றும் சந்திரசேகர் ராவ் ஆகியோர் இல்லத்துக்கு சென்றும் போலீசார் விசாரணை மெற்கொண்டனர். எங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட எல்லைக்குள் வசிக்கும் முக்கிய நபர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களின் ஊழியர்கள் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு பீட் ஆபிசர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
ஏதாவது முக்கிய தலைவரின் வீட்டு முன் போராட்டம் நடைபெற்றால், இதுபோன்ற தகவல்கள் இல்லாமல் வீடுகளை கண்டறிவதிலும் தலைவர்களின் ஊழியர்களையும் கண்டறிவதிலும் போலீசாருக்கு சிக்கல் இருக்கிறது' எனத் தெரிவித்தார்.
மேலும், அமித் ஷா, சோனியா காந்தி போன்ற தலைவர்களின் தகவல்களையும் போலீசார் வைத்துள்ளதாக அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications