ஒடிசாவில் வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீச்சு! காங்கிரஸ்தான் காரணம்.. பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு
புவனேஸ்வர்: ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு நெருக்கமானவரும், அம்மாநில வளர்ச்சி திட்டங்களின் தலைவருமான வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தை சேர்ந்த வி.கே. பாண்டியன், கடந்த ஆண்டு ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தள கட்சியின் கேபினட் அமைச்சர் பொறுப்புக்கு இணையான பதவியில், அம்மாநில அரசால் அமர்த்தப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வி.கே.பாண்டியன் அரசியலில் நுழைந்திருந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பாண்டியனும் கட்சியுடன் இணைந்து சில முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், காலங்காலமாக கட்சியில் இருக்கும் தங்களை விட வி.கே.பாண்டியனுக்கே முதலமைச்சர் நவீன் பட்நாயக் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பிஜூ ஜனதா தளம் நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், இன்று கஞ்சம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
கஞ்சம் மாவட்டத்தில் பெல்லகுண்டாவில் இன்று காலை 'அமா ஒடிசா நபி ஒடிசா' திட்டத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாண்டியன் வந்திருந்தார். சாரியாக காலை 11.30 மணியளவில் அவர் மேடைக்கு வந்தபோது, இளைஞர் ஒருவர் திடீரென அவர் மீது தக்காளியை வீசினார். இதனை சற்றும் எதிர்பாராத பிஜூ ஜனதா தள தொண்டர்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாண்டியன், "முட்டை, தக்காளி, மை என எதை என்மீது வீசினாலும் நான் ஒடிசா மக்களுக்காக சேவை செய்வேன்" என்று கூறினார். பாண்டியன் மீது தக்காளி வீசிய இளைஞர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications