மதுராவில் உருவாகிறது 70 அடுக்குகளுடன் 700 அடி உயர இந்து ஆலயம்
மதுரா: உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் 70 அடுக்குகளுடன் 700 அடி உயரத்தில் மிக உயரமான இந்து ஆலயம் கட்டுவதற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
ஸ்ரீ கிருஷ்ணர் தனது இளம்பருவத்தில் பிருந்தாவனத்தில் விளையாடி மகிழ்ந்தார் என்கின்றன புராணங்கள்.
அயோத்தி ராமஜென்ம பூமி என்றால், உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரம் கிருஷ்ண ஜென்ம பூமி. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன.
கிருஷ்ணர் பிறந்த மதுராவில் ‘சந்திரோதயா மந்திர்' என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை கட்ட ஸ்ரீல பிரபுபாதா என்பவர் விரும்பினார்.

700 அடி உயர ஆலயம்
‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்றறியப்படும் ‘இஸ்கான்' அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போதைய ‘அக்ஷய் தாம் பிருந்தாவன்' பகுதி அருகே 700 அடி உயரத்தில் எழும்பவுள்ள இந்த சந்திரோதயா மந்திருக்கான திட்டப்பணிகளை கடந்த ஹோலி பண்டிகையின்போது அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டு விழா
இதனையடுத்து, வேத விற்பன்னர்களின் மந்திர ஒலியுடன் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று தொடங்கியது. இவ்விழாவில் ஆன்மிக பெரியோர்கள், மதுரா தொகுதியின் எம்.பி. ஹேமா மாலினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பெரும் திரளாக பங்கேற்றனர்.

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
இந்த ஆலயத்தையொட்டி இருக்கும் 26 ஏக்கர் காலி இடத்தில், புராணக் காலத்து பிருந்தாவனத்துக்கு நிகராக, கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தை பிரதிபலிக்கும் வகையில் எழில் மிகும் வனப்பகுதி, இசைக்கேற்ப நடனமாடும் அழகிய செயற்கை நீரூற்று, பகவத் கீதை தொடர்பான ஆராய்ச்சி பாடசாலை, யமுனை நதியின் புனித நீரினை தேக்கி வைக்கும் குளங்கள், பசுக்களை பராமரிக்கும் மடமான ‘கோசாலை', அமைக்கப்பட உள்ளது.

யாதவர்களின் கிராமங்கள்
பண்டைக் காலத்தில் யாதவ குல மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் இயற்கை வனப்புடன் கூடிய கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 700 அடி உயரம் கொண்ட ஆலயம் என்ற சிறப்பு தகுதியுடன் உருவாகவுள்ள இந்த ஆலயத்தின் உச்சி வரை சென்று வர ‘கேப்சூல் லிப்ட்' வசதியும் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications