வியாபம் ஊழல் விவகாரம்: ம.பி., உ.பி.யில் 40 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை!
போபால்: வியாபம் ஊழல் முறைகேடு தொடர்பாக மத்திய பிரதேசம், உத்தரபிரதேச மாநிலங்களில் ஒரே நேரத்தில் 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக முதல் முறையாக நேற்று சோதனை நடத்தினர்.
மத்திய பிரதேசத்தின் தொழில் முறை தேர்வு வாரியமான "வியாபம்" மூலம் மாநில அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். மேலும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் நுழைவுத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தது. இதுதான் ஆசியாவின் மிகப் பெரிய ஊழலாகவும் கருதப்படுகிறது.

இம் முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சுமார் 50 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதனால் வியாபம் ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
இதை தொடர்ந்து வியாபம் ஊழல் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை சி.பி.ஐ. 105 வழக்குகளை பதிவு செய்து வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் வியாபம் ஊழல் தொடர்பாக மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்துக்கு உட்பட்ட போபால், இந்தூர், ஜபல்பூர், உஜ்ஜெயின், ரெவா, லக்னோ மற்றும் அலகாபாத் ஆகிய நகரங்களில் 40 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு போபால் சிறையில் இருக்கும் மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட முதலாவது அதிரடி சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications