இந்தியாவிற்கு திரும்பி வர விருப்பம் ஆனாலும் பாஸ்போர்ட் முடக்கம் தடையாக உள்ளது - விஜய் மல்லையா
டெல்லி: இந்தியா திரும்ப தமக்கு விருப்பம் இருந்தாலும் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தொழிலதிபர் விஜய் மல்லையா நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார் விஜய் மல்லையா. இதனிடையே வங்கி கடன்கள் தொடர்பான வழக்கில் பலமுறை அழைப்பானை அனுப்பப்பட்டும் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதனிடையே அவரது பாஸ்போர்ட்டை கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி மத்திய அரசு முடக்கியது.
மல்லையா மீதான வெளிநாட்டு பண பரிமாற்றம் மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இது தொடர்பான வழக்கின் போது மல்லையா அனுப்பிய மின்னஞ்சல் நகலை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில் இந்தியா வர தமக்கு விருப்பம் உள்ளதாகவும், எந்த விளக்கமும் கேட்காமல் தமது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா வர தமக்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மல்லையா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கடிதத்தை வழக்கில் இணைத்து கொண்ட நீதிபதி அக்டோபர் 4-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். பல்வேறு வழக்குகளில் ஆஜராகாததால் இந்தியாவில் அவருக்கு இருக்கும் சொத்துக்களை அமலாக்கப்பிரிவினர் படிப்படியாக பறிமுதல் செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு திரும்பி வர திட்டம் எதுவும் இல்லை என மல்லையா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications