ராஜ்யசபாவிலும் வக்பு வாரிய சட்டத் திருத்தம் நிறைவேறும்! நம்பிக்கையில் மத்திய அரசு!
டெல்லி: ராஜ்யசபாவில் இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்ட வக்பு சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்படும்; அதேநேரத்தில் லோக்சபாவில் நிறைவேறியது போல ராஜ்யசபாவிலும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா எளிதாக நிறைவேறிவிடும் என்பது ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நம்பிக்கை.
இஸ்லாமியர்கள் தங்களது மதத்துக்கு நன்கொடையாக வழங்கும் வக்பு சொத்துகளை நிர்வகிப்பது வக்பு வாரியம். இந்த வக்பு வாரியத்தின் நிர்வாக நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா.

நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று பகல் 12 மணிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது நேற்று லோக்சபாவில் 12 மணிநேரம் விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு வக்பு மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. வக்பு மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்பிக்களும் எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்தனர். இதனையடுத்து லோக்சபாவில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. மொத்தம் 60 எம்பிக்கள் இந்த விவாதத்தில் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் இன்று வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது ராஜ்யசபாவில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என்பது எதிர்பார்ப்பு.
ராஜ்யசபாவில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு பாஜகவின் 98; ஜேடியூவின் 4; அஜித்பவார் என்சிபி 3; தெலுங்குதேசம் கட்சியின் 2 உள்ளிட்ட மொத்தம் 125 எம்பிக்கள் ஆதரவு உள்ளது.
ராஜ்யசபாவில் இந்தியா கூட்டணிக்கு மொத்தமே 88 எம்பிக்கள் ஆதரவுதான் உள்ளது. நவீன் பட்நாயக்கின் பிஜேடியின் 7 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தாலும் கூட பாஜக கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கையைவிட குறைவுதான் இதனால் ராஜ்யசபாவில் இன்று வக்பு மசோதா மிக எளிதாக நிறைவேறும் என்பது பாஜக கூட்டணி அரசின் நம்பிக்கை.












Click it and Unblock the Notifications