வக்பு தடை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை- மத்திய அரசு வாதங்களுக்கு எதிராக திமுக மனு!
டெல்லி: மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று திமுக பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இதில், வக்பு சட்டத்துக்கு ஆதரவான மத்திய அரசின் வாதங்களை நிராகரிக்க வேண்டும்; வக்பு சட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது.

மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. திமுக, முஸ்லிம் லீக், தவெக, மஜ்லிஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பாக 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், வக்பு சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது. புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்த ஒரு நடவடிக்கையும் நியமனங்களும் மே 5-ந் தேதி வரை நடைபெறக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.
மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில், வக்பு சடத்துக்கு எதிரான மனுக்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.
திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசின் அனைத்து வாதங்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்; மத்திய அரசின் வக்பு சட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு, வக்பு மசோதாவை தாக்கல் செய்த போதே திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்ததன. நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலும் திமுகவின் ஆ.ராசா, அப்துல்லா ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததால் சட்டமாக நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடருவோம் என அறிவித்தபடி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தாக்கல் செய்தது. திமுகவின் ஆ.ராசா எம்பி சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications