துபாயில் போதைப் பொருள் வழக்கில் சிக்கி கைதானாரா சுனந்தாவின் மகன் சிவ் மேனன்?
மும்பை: சசி தரூரின் மனைவி சுனந்தாவுக்கும், அவரது 2வது கணவருக்கும் பிறந்த மகன் சிவ் மேனன், துபாயில் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் சிக்கி கைதானார் என்று பரபரப்பான ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.
சுப்பிரமணியம் சாமிதான் இப்படிக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். மேலும், சசி தரூர்தான் இந்த வழக்கிலிருந்து தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிவ் மேனனை சிறையிலிருந்து மீட்டதாகவும் சாமி கூறியுள்ளார்.
இந்த வழக்கில், சிவ் மேனன் சார்பாக துபாயைச் சேர்ந்த இந்திய வழக்கறிஞரான ஆசிஷ் மேத்தா ஆஜரானதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியைச் சேர்ந்தவர் மேத்தா. இவருடன் சுனந்தாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல அறிமுகம் உண்டு. சுனந்தா துபாயில் இருந்தபோது அவருக்கு நல்ல சட்ட அறிவுரைஞராக இருந்துள்ளார் மேத்தா. இப்போது சுனந்தாவின் மகனுக்கும் இவர்தான் கை கொடுத்தாராம்.
கொச்சி ஐபிஎல் அணி விவகாரத்தின்போது கூட சுனந்தாவுக்கு மேத்தாதான் சட்ட ஆலோசகராக இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
துபாயில் போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி சிவ் மேனன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதைத்தான் சுப்பிரமணியம் சாமி தனது டிவிட்டர் தகவலில் குறிப்பிட்டு கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிவ் மேனனை சிறையிலிருந்து மீட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் காரணமாக சுனந்தாவும் கடந்த ஆண்டு கோடை காலத்தில், துபாயில் சில மாதங்கள் தங்கியிருந்துள்ளார். ஆனால் அதன் பிறகு அவரது திருமண வாழ்க்கையில் பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தரார் குறுக்கிட்டதால் அவருக்கே பிரச்சினையாகி இந்தியா திரும்ப நேரிட்டது.
இருப்பினும் சிவ் மேனன் மீது எந்தவிதமான வழக்கும் இல்லை என்றும் சுப்பிரமணியம் சாமி சொல்வது பொய் என்றும் சசி தரூர் தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல தனக்குத் தெரிந்தவரை சிவ் மேனன் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்று வழக்கறிஞர் மேத்தாவும் கூறுகிறார்.
மேத்தா சாதாரணமான வழக்கறிஞர் இல்லை. ஷாருக் கான், பிரியங்கா சோப்ரா, போன்றோருக்கு நல்ல நண்பராம். சல்மான் கான் கூட மானைச் சுட்டு வேட்டையாடிய வழக்கில் மேத்தாவின் சட்ட ஆலோசனைகளைக் கேட்டுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
உண்மை எதுவென்று தெரியவில்லை.