வெற்றி பெற வேண்டிய கட்டாயம்..வழிவிட்ட காங்கிரஸ்.. பவானிபூர் தொகுதியில் பிரசாரம் தொடங்குகிறார் மம்தா!
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் இன்று முதல் பிரசாரத்தை வெற்றிகரமாக தொடங்குகிறார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி பீடத்தில் அமர்ந்து இருக்கிறார் மம்தா பானர்ஜி. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது திரிணாமுல் காங்கிரஸ். மம்தாவுக்கு பலத்த போட்டி கொடுத்த பாஜகவும் 77 இடங்களை கைப்பற்றியது.

பாஜக வியூகம்
இந்த தேர்தலுக்கு முன்பாக பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் ஏற்பட்ட மோதல் நாடே அறியும். எப்படியாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருந்தது. மம்தாவின் வலது கரமாக இருந்த சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை தனது பக்கம் இழுத்தது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் தேர்தல் முடியும் வரையில் மேற்கு வங்கத்தை சுற்றி வந்தனர்.

நந்திகிராமில் தோல்வி
ஆனாலும் அமித்ஷாவின் வியூகம், சவால்கள் ஆகியவற்றை சமாளித்து மேற்கு வங்க மக்கள் தங்கள் பக்கம்தான் என்பதை நிரூபித்து விட்டார். திரிணாமுல் ஆட்சியை பிடித்த போதிலும் நந்திகிராம் தொகுதியில் அதிர்ச்சி தோல்வியை தழுவினார் மம்தா பானர்ஜி. அதுவும் முன்னாள் நண்பனும், இந்நாள் எதிரியுமான பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் வெற்றியை பறிகொடுத்தது திரிணாமுல் தொண்டர்களுக்கு மட்டுமில்லாது மம்தாவுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

வெற்றிக்காக களமிறங்கும் மம்தா
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தேர்தலில் தோல்வி அடைந்ததால் 6 மாதத்துக்குள் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால்தான் மம்தாவால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும். அந்த வகையில் பவானிபூர் தொகுதியில் வெற்றிக்காக களம் இறங்குகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி.

காங்கிரஸ் அறிவிப்பு
பவானிபூர் தொகுதியில் மம்தா போட்டியிடுவதால், அவருக்கு எதிராக வேட்பாளர் யாரையும் நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவோம் என்று கூறிய காங்கிரஸ் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறது. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசினார்.

இன்று முதல் பிரசாரம்
மம்தா பானர்ஜிக்கு எதிராக காங்கிரஸ் எந்த வேட்பாளரையும் நிறுத்தவோ அல்லது அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்யவோ மாட்டாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் கூறியுளளார். டெல்லி காங்கிரஸ் தலைமையின் உத்தரவின்பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் பவானிபூர் தொகுதியில் இன்று முதல் பிரசாரத்தை வெற்றிகரமாக தொடங்குகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி.

பாஜக போட்டி
பவானிபூர் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு கொல்கத்தாவில் உள்ள செட்லா பகுதியில் அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிடவில்லை என்று விலகி விட்ட நிலையில், மம்தாவுக்கு பலத்த போட்டியாக கடும் நெருக்கடி கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்கத்தை கைப்பற்ற முடியாவிட்டாலும், இதில் மம்தாவை தோற்கடித்தே தீர வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வரிந்து கட்டி நிற்கின்றனர். ஆட்சியில் இருப்பதால், மக்கள் ஆதரவும் இருப்பதால் மம்தா எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மம்தா மேற்கு வங்க முதல்வராக நீடிப்பாரா? இல்லையா? என்பது வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபர் 3-ம் தேதி தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications