உஷாரா இருக்கணும்.. பேரழிவை தந்த 2ம் உலகப்போர்.. ஜி20 மாநாட்டில் உலக நாடுகளை எச்சரித்த பிரதமர் மோடி
ஜகார்த்தா: உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். கடந்த நூற்றாண்டில் 2ம் உலகப்போர் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய நிலையில் அப்போதைய தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டனர். இப்போது அதனை நாம் செய்ய வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி 20 உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றுள்ளார். அதேபோல் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பாலி நகருக்கு சென்றுள்ளனர்.
பெரிய அவமானம்! ஜி20 மாநாட்டை சீண்டாத புதின்..இடையில் உள்ளே வரும் உக்ரைன்! செம கடுப்பில் உலக நாடுகள்
பிரதமர் மோடி பேச்சு
இந்நிலையில் இன்று காலை ஜி20 உச்சிமாநாடு பாலி நகரில் துவங்கியது. பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு ஜி20 தலைவர்கள் வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைத்து நாட்டு தலைவர்களையும் இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார். ஜி20 உச்சிமாநாடு துவங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். கடந்த நூற்றாண்டில் 2ம் உலகப்போர் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய நிலையில் அப்போதைய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்போது நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
உணவு பற்றாக்குறை
இன்றைய உரத்தட்டுப்பாடு என்பது நாளைய உணவு பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கும். இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உரத்தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வேண்டும். உரம்-உணவு தானிய வினியோகங்கள் மற்றும் பாதுகாப்புக்காக நாடுகள் இடையே பரஸ்பர ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
இந்தியாவில் உணவு பாதுகாப்பு
இந்தியாவில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து தினை, தானியங்களை பயிரிட ஊக்குவித்து வருகிறோம். தினை வகைகள் என்பது உலகளாவிய ஊட்டசத்து குறைபாடு, பசியை தீர்க்கும். அடுத்த ஆண்டு நாம் அனைவரும் சர்வதேச தினை ஆண்டை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்.
கட்டுப்பாடுகள் கூடாது
உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளதால் உலக வளர்ச்சிக்கும் இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. எரிபொருள் வினியோகத்தில் எந்த கட்டுப்பாடுகளையும் ஜி20 நாடுகள் ஊக்குவிக்க கூடாது. 2030ம் ஆண்டுக்குள் மின்சாரத்தில் பாதிக்கு மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும். இதனால் எரிபொருள், எரிசக்திகளுக்கு தேவையான நிதி, தொழில்நுட்பங்களை வழங்க ஜி20 உச்சி மாநாடு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்'' என பிரதமர் மோடி பேசினார்.