"நாங்கள் இதுவரை 5 பேரை கொன்றுள்ளோம்! பசுவதை செய்தாலே கொலை தான்" சர்ச்சையை கிளப்பிய பாஜக தலைவர்
ஜெய்ப்பூர்: மாடுகள் கறிக்காக வெட்டப்படுவது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் கியான் தேவ் அஹுஜா பேசியுள்ளது பெரிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பசுவதை செய்வதாகக் கூறியும் மாடுகளைக் கறிக்காகக் கடத்தப்படுவதாகக் கூறியும் அப்பாவிகள் மீதான தாக்குதல் தொடர்ந்தது.
இந்த விவகாரத்தில் சில மரணங்களும் கூட நிகழ்ந்தன. இந்தச் சம்பவங்கள் இப்போது தான் சில ஆண்டுகளாகக் குறைந்துள்ள நிலையில், பாஜக தலைவரின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளைக் கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில் அங்குள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கியான் தேவ் அஹுஜா கூட்டம் ஒன்றில் பசுவதை தொடர்பாகக் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

5 பேர்
கூட்டம் ஒன்றில் பேசி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "பசுவதையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தால் அவரை கொல்லுங்கள். லாலாவண்டி அல்லது பெஹ்ரோர் பகுதிகளில் நாங்கள் இதுவரை மட்டும் ஐந்து பேரைக் கொன்றுள்ளோம்" என்றார். ராம்கர் பகுதியில் 2017, 2018 ஆண்டுகளில் நடந்த கொலையை அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது ராஜஸ்தானை பாஜக ஆட்சிய செய்த நிலையில், ராம்கர் எம்எல்ஏவாக கியான் தேவ் அஹுஜா இருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு சுதந்திரம்
அந்த வீடியோவில் அவர் மேலும் சர்ச்சைக்குரிய வகையில், "பசுவதையில் ஈடுபடுவோரைக் கொல்லலாம். தொண்டர்களுக்கு இதில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன். நாங்கள் வழக்கை நடத்தி, அவர்களுக்கு ஜாமீன் அல்லது விடுதலை பெற்றுத் தருவோம்" என்றார். கடந்த 2019இல் நடந்த பெஹ்லு கான் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரும் 2019இல் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்படவே ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்குப்பதிவு
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படு உள்ளது. அதேநேரம் கியான் தேவ் அஹுஜா இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பு பசுவதை செய்பவர்களைக் கொலை செய்பவர்களே உண்மையான தேசபக்தர்கள் என்றும் அவர்கள்தான் சத்ரபதி சிவாஜி மற்றும் குரு கோவிந்த் சிங் ஆகியோரின் உண்மையான வாரிசுகள் என்றும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தார்.

மறுப்பு
இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பாஜக மத ரீதியிலான பயங்கரவாதத்தைப் பரப்புகிறது என்பதை நிரூபிக்க இதைவிட என்ன ஆதாரம் தேவை எனக் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இது பெரியளவில் சர்ச்சையான நிலையில், பாஜக இதற்கு விளக்கம் கொடுத்து உள்ளது. அது அவரது சொந்தக் கருத்து என்றும் இதற்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை என்றும் பாஜகவின் சஞ்சய் சிங் நருகா தெரிவித்து உள்ளார்.

விளக்கம்
கியான் தேவ் அஹுஜாவும் தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார். "நான் யாரையும் கொலை செய்தோம் எனக் கூறவில்லை. அதேநேரம் பசுவைக் கடத்தி கொலை செய்பவர்கள் என்றும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். பசுக்களைக் கடத்திய ஐந்து முஸ்லிம்களைத் தொண்டர்கள் தாக்கினர் என்றே நான் சொன்னேன். தவறாகப் பொருள்படும்படி எதுவும் சொல்லவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications