அப்சல் குருவின் பெயரில் இந்தியாவில் 13 இடங்களில் தாக்குதல்... மிரட்டும் பாக். தீவிரவாதிகள்!
டெல்லி: நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குரு 13 ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவின் 13 இடங்களில் தாக்குதலை நடத்தப் போவதாக பாகிஸ்தானின் ஜெய்ஷி இ முகமது தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொலைபேசிகளை உளவுத்துறையினர் இடைமறித்து ஒட்டு கேட்டிருந்தனர். அப்போது பேசிய ஒரு குரல், ஜெய்ஷி இ முகமது இயக்கத்தில் புதிய தீவிரவாதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அப்சல் குரு 13 ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவில் 13 இடங்களில் தாக்குதலை நடத்தலாம்.இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது என்கிறது. இந்த குரல், இந்தியாவால் தேடப்படுகிற தீவிரவாதி மவுலானா மசூத் அசாரின் சகோதரர் மவுலானா அப்துல் ரவூப்பின் குரலாக இருக்கலாம் என சந்தேகிக்கிறது.
இந்த ரவூப்தான், 1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தி மசூத் அசாரை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டியவன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம், பெண்கள் தற்கொலைப் படை பிரிவை ஒன்றையும் உருவாக்கி உள்ளது. 300 தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானில் தயாராக உள்ளனர் என்பதும் அந்த உரையாடலில் பதிவாகி இருந்தது தெரியவந்துள்ளது.
அத்துடன் பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டிருந்தால் எதுவும் நடக்காது.. இந்தியாவை பிரிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானுடன் சேர்க்க வேண்டும் என்ற குரலும் அந்த உரையாடலில் பதிவாகி இருந்ததாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த உரையாடலில் பல்வேறு தீவிரவாதிகளின் பெயர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 5 பேர் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உதவி வருவதும் இந்த உரையாடல்கலில் அம்பலமாகியுள்ளது என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications