அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், நாங்கள் தொடர்ந்து போராடுவோம்- சோனியா
டெல்லி: சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட 3 முக்கிய பாஜக தலைவர்களின் ராஜினாமாவைக் கோரி தொடர்ந்து நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வரும் காங்கிரஸ் கட்சி தனது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது. அவர்கள் எங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் அவதூறாகப் பேசட்டும். எங்களுக்குக் கவலை இல்லை. எங்களது போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே சிந்தியா, சிவராஜ் சிங் செளகான் ஆகியோர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தொடங்கிய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரை காங்கிரஸ் கட்சி ஸ்தம்பிக்க வைத்தது. காங்கிரஸாரின் போராட்டத்தால் இரு அவைகளும் முடங்கிப் போயின.

இந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் பொகாடியா உள்ளிட்டோரை மையமாக வைத்து பாஜக தரப்பிலிருந்து தாக்குதல்கள் கிளம்பியுள்ளன. இந்தப் பின்னணியில் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எங்களது போராட்டம் தொடரும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். எங்களுக்குக் கவலை இல்லை என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறுகையில், 3 பேரும் ராஜினாமா செய்தாக வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றக் கூட்டம் நடத்த அனுமதிப்போம். இதை நிபந்தனையாகவே கூறுகிறோம் என்றனர்.
லோக்சபாவைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு 44 எம்.பிக்கள்தான் உள்ளனர். இருப்பினும் அது ஆவேசமாக போராடி வருகிறது. ராஜ்யசபாவில் பாஜக மைனாரிட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு அமளி சற்று அதிகமாகவே இருக்கிறது. மேலும் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸின் கையை நம்பி உள்ளது பாஜக. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் அக்கட்சி உள்ளது. அதேசமயம் இறங்கி வரவும் அது தயாராக இல்லை.












Click it and Unblock the Notifications