"காஷ்மீர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம்" - பிபிசிக்கு தாலிபன் தலைவர் பேட்டி

Subscribe to Oneindia Tamil
We will raise voice for muslims in kashmir says Taliban leader in BBC interview
BBC
We will raise voice for muslims in kashmir says Taliban leader in BBC interview

ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று பிபிசியிடம் பேசிய தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.

தோஹாவில் உள்ள சுஹைல் ஷாஹீல் ஜூம் செயலி மூலம் பிபிசிக்கு அளித்த நேர்காணலின்போது, கத்தார் நாட்டின் தோஹாவில் அமெரிக்காவுடன் தாலிபன் செய்து கொண்ட உடன்பாட்டு விதிகளில் கையெழுத்திட்டபோதே, ஆப்கானிஸ்தான் மண்ணை வேறெந்த நாட்டுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் எந்த கொள்கையும் தங்களுக்கு இல்லை என பேசியதை நினைவுகூர்ந்தார்.

"முஸ்லிமாக இருப்பதால், காஷ்மீரிலோ இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்காகவோ குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு," என்றும் ஷாஹீன் தெரிவித்தார்.

"முஸ்லிம்கள் உங்களுடைய சொந்த மக்கள், உங்களுடைய குடிமக்கள், உங்களுடைய சட்டத்தின்கீழ் அவர்கள் சமமானவர்கள் என்று எங்களுடைய குரலை உரத்து ஒலிப்போம்," என்று அவர் கூறினார்.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் அரசு அமைந்த பிறகு, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்த குற்றச்சாட்டை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மறுக்கின்றன.

இந்தியாவை சுற்றியுள்ள மூன்று அண்டை நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை மோதி அரசு கொண்டு வந்தது, முஸ்லிம்களை ஓரங்கட்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு இருந்து வந்த சிறப்பு அதிகாரத்தை திரும்பப் பெற்ற இந்திய அரசின் நடவடிக்கையும் அதை செயல்படுத்திய விதமும் அங்குள்ள பல உள்ளூர் வாசிகளை கோபப்படுத்தியது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த நாற்பது ஆண்டுகளாக பிரச்னை நீடிப்பதற்கு, ஜம்மு காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற விவகாரமே மூல காரணமாகும்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் குழப்பங்கள் நிறைந்த வெளிநாட்டுப் படை விலக்கலைத் தொடர்ந்து அந்த நாட்டின் கட்டுப்பாட்டை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தாலிபன் தமது வசமாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தானுக்குள் இருக்கும் இந்திய எதிர்ப்பு சக்திகள் முளைக்கலாம் என்றும்

தாலிபனுக்குள் உள்ள சில பிரிவுகள் இனி தங்களுடைய பார்வையை ஜம்மு காஷ்மீர் பக்கம் திருப்பலாம் என்றும் இந்தியாவில் உள்ள பலரும் அஞ்சுகிறார்கள்.

சமீபத்தில் ஒளிபரப்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாகிஸ்தானில் ஆளும் பிடிஐ கட்சித் தலைவர் நீலம் இர்ஷாத் ஷேக், "காஷ்மீர் விடுதலைக்காக எங்களுக்கு உதவுவதாகவும் இந்த விஷயத்தில் நாங்களுடன் உங்களுடன்தான் என்றும் தாலிபன்கள் கூறியுள்ளனர் என்றும் பேசியதாக ஒரு காணொளி விரிவாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. சில நாளிதழ்களிலும் அந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

இந்தியாவுக்கு சோதனைக்காலம்

2001ஆம் ஆண்டில் தாலிபனை அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் வெளியேற்றும் முன்பாக, அந்த நாட்டில் தாலிபனுக்கு எதிரான வடக்கு கூட்டணி குழுவை இந்தியா ஆதரித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தாலிபன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அப்கானிஸ்தானில் எழுச்சி பெற்றிருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதுநாள்வரை அந்த நாட்டின் ஆட்சிப்பொறுப்புக்கு தலைமை தாங்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய அஷ்ரஃப் கனி அரசுடன் இந்தியா நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தது.

அந்த நாட்டில் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் கோடிக்கணக்கில் இந்தியா முதலீடுகளை குவித்து வந்தது. ஆனால், தற்போது அந்த நாட்டில் தாலிபன் அதிகாரத்துக்கு வந்து விட்டதால், இந்தியா ஆப்கனில் முன்னெடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகுமோ என்ற அச்சம் காணப்படுகிறது.

இத்தகைய சூழலில்தான் கத்தாரின் தோஹாவில் உள்ள தாலிபன் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தாலிபன் தலைவர் ஷெர் மொஹம்மத் அபாஸ் ஸ்டானெக்ஸாயுடனான முதலாவது அதிகாரபூர்வ தொடர்பை இந்தியா ஏற்படுத்தி தமது கவலைகளை வெளிப்படுத்தியது.

அந்த சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் தீவிரவாத செயல்களுக்கும் எந்தவொரு வடிவிலும் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவித்தது.

இந்தியாவுக்கு இது எளிதான தேர்வல்ல

மோதி
Getty Images
மோதி

தாலிபனுடன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் வெளிப்படையாகவே பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், ஆயுத குழுக்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது இந்திய அதிகாரிகளுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை.

தாலிபன் கட்டமைப்பில் ஹக்கானி குழு என அழைத்துக் கொள்ளும் ஆயுதக்குழுதான் ஆயுதங்களை சிறந்த முறையில் கையாளும் பயிற்சி பெற்றது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் உள்பட இந்திய சொத்துகள் பலவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மூளையாகவும் தாக்குதல்களை செயல்படுத்திய குழுவாகவும் இந்த ஹக்கானி குழு அறியப்படுகிறது என டெல்லியில் இருந்து செயல்படும் பன்னாட்டு சர்வதேச உறவுகள் தொடர்பான ஆய்வு அமைப்பான கர்னெஜி இந்தியாவின் அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் ஹக்கானி தலைமைக்கு இடையிலான நெருங்கிய தொடர்பை வைத்துப் பார்க்கும்போது, ஐஎஸ்ஐயுடன் சேர்ந்து கொண்டு இந்திய எதிர்ப்பு கொள்கையை ஹக்கானி குழு தொடரவே அதிக வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஷாஹீனிடம் பிபிசி கேட்டபோது, ஹக்கானிக்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகள் எல்லாம் வெறும் ஊகங்களே என்று பதிலளித்தார்.

"ஹக்கானிகள் ஒரு குழு கிடையாது. அவர்கள் இஸ்லாமிய ஆப்கானிஸ்தான் எமிரேட்டின் அங்கம். அவர்கள்தான் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்," என்கிறார் ஷாஹீன்.

ஆப்கானிஸ்தான் தாலிபன்
Reuters
ஆப்கானிஸ்தான் தாலிபன்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து காட்மாண்டுவுக்கு 180 பேருடன் சென்ற இந்திய விமானம் கடத்தப்பட்டதில் தாலிபனின் பங்கு இன்னும் இந்தியர்களின் மனதை விட்டு நீங்காமல் உள்ளது.

அப்போது அந்த விமானம் ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கடத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகளை தாலிபன்கள் பணய கைதிகளாக வைத்துக் கொண்டதால் இந்திய சிறைகளில் உள்ள மூன்று தீவிரவாதிகளை விடுவித்து பயணிகள் மீட்கப்பட்டனர்.

"இந்த தாலிபன்தான் 1999ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்துவதற்காக தீவிரவாதிகளை பாகிஸ்தானுக்குள் பாதுகாப்பாக அழைத்து வந்தது," என்றும் கர்னெஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தகவல்களை மறுக்கும் ஷாஹீன், இந்திய விமான கடத்தலில் தாலிபனுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் பயணிகளை மீட்க தாலிபன்கள் உதவியதாகவும் கூறுகிறார். தங்களுடைய செயலுக்காக இந்திய அரசு தாலிபனுக்கு நன்றி கூறியிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"கந்தஹாருக்கு வந்த இந்திய விமான நிலையத்தில் போதுமான எரிபொருள் இல்லை என்பதால் பணய கைதிகளை மீட்க உதவுமாறு தங்களை இந்திய அரசு அப்போது கேட்டுக் கொண்டது' என்றும் ஷாஹீன் தெரிவித்தார்.

தாலிபன் எதிர்ப்பு பிரசாரத்தை இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்துவதாகவும் ஷாஹீன் குற்றம்சாட்டினார்.

டேனிஷ் சித்திக்கி கொலையில் தொடர்பா?

ஆப்கானிஸ்தான் தாலிபன்
Reuters
ஆப்கானிஸ்தான் தாலிபன்

இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்கி சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் தாலிபன் செய்தித்தொடர்பாளர் தமது நேர்காணலின்போது தெரிவித்தார்.

"டேனிஷ் சித்திக்கியை யார் சுட்டார்கள் என எங்களுக்குத் தெரியாது. அது ஒரு சண்டை. இரு தரப்பிலும் சண்டை நடந்தது," என்கிறார் ஷாஹீன்.

புலிட்செர் பரிசு பெற்ற சிறந்த செய்தியாளராக அறியப்பட்ட டேனிஷ் சித்திக்கி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்காக வேலை பார்த்தார். ஆப்கன் படையினரின் பாதுகாப்புடன் அவர் சென்ற வாகனம், தாலிபன் ஆயுத போராளிகளால் பாகிஸ்தானை இணைக்கும் ஸிபின் போல்தாக் என்ற நகரில் தாக்கப்பட்டது.

டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு உள்ளூர் மக்கள், டேனிஷ் சித்திக்கியை கொன்ற பிறகு அவரது உடலை சூழ்ந்திருந்த தாலிபன்கள், "இந்திய உளவாளியை கண்டுபடித்து கொன்று விட்டோம்," என்று கூறியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

"இப்போதும் அப்படித்தான் அவர்கள் கூறுகிறார்கள்," என்று ஓர் உள்ளூர்வாசி அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து நம்மிடம் பேசினார்.

ஆப்கானிஸ்தான் தாலிபன்
Reuters
ஆப்கானிஸ்தான் தாலிபன்

இது குறித்தும் தாலிபன் செய்தித் தொடர்பாளரிடம் கேட்கப்பட்டது. ஆனால், அவரோ மக்களில் சிலர் வதந்திகள் கலந்த உரையாடலில் ஈடுபடுகிறார்கள்," என்று தெரிவித்தார்.

டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான முழு விசாரணையின் விவரத்தை ஊடகங்களில் விரைவில் பகிர்வதாகவும் ஷாஹீன் கூறினார்.

தாலிபனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள தாலிபன் எதிர்ப்பாளர்கள் பற்றி கேட்டபோது, முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேஹ் தலைமையில் தாலிபனில் இருந்து பிரிந்து சென்ற ஆயுதப்போராளிகள் எங்களை எதிர்க்க சூளுரைத்திருப்பதால் அந்த பள்ளத்தாக்கில் நிலைமை பதற்றத்துடன் உள்ளது என்று சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் வீடு, வீடாகச் சென்று குடும்பத்தினரை தாலிபன்கள் அச்சுறுத்துவது மற்றும் குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து தேடுவதாக வெளிவரும் ஊடக தகவல்களையும் தாலிபன் செய்தித்தொடர்பாளர் மறுத்தார்.

"அப்படி எந்தவொரு தாக்குதல் பட்டியலும் கிடையாது," என்றும் சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+