மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: 6 வது கட்ட வாக்குப்பதிவு நிறைவு - 79.04% வாக்குகள் பதிவு
மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலுக்கான 6ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணி நிலவரப்படி 79.04% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலுக்கான 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணி நிலவரப்படி 79.04% வாக்குகள் பதிவாகியுள்ளன. 43 தொகுதிகளில் மொத்தம் 306 வாக்காளர்கள் களமிறங்கினர். கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இன்றைய வாக்குப்பதிவில் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
43 தொகுதிகளில் மொத்தம் 306 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும்நிலையில் ஏற்கெனவே 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்றைய தினம் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய், திரிணாமுல் அமைச்சர்களுமான ஜோதிபிரியா மாலிக், சந்திரிமா பட்டாச்சார்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தன்மே பட்டாச்சார்யா ஆகியோர் உள்பட மொத்தம் 306 வாக்காளர்கள் களமிறங்கினர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் திரைப்பட இயக்குநர் ராஜ் சக்கரவர்த்தி, நடிகை கவுஷானி முகர்ஜி ஆகியோரும் இந்த ஆறாம் கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் 53.21 லட்சம் ஆண் வாக்காளர்கள், 50.65 லட்சம் பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 43 தொகுதிகளில் மொத்தம் 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்க 1,071 கம்பெனி மத்திய படைப் பிரிவினர் மற்றும் மாநில போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆங்காங்கே சின்னச் சின்ன அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டன. குனியா என்ற இடத்தில் வாக்குச் சாவடிக்கு முன்பு இரு கோஷ்டிகளும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை எச்சரிக்கும் விதமாக மத்திய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் வானில் சுட்டு விரட்டியடித்தனர்.
ஒரு வீட்டில் துப்பாக்கிக் குண்டுகள் பட்டு சேதம் அடைந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். ராய்க்குஞ் என்ற இடத்தில் வாக்களிக்க சென்ற சிலர் சரியான அடையாள அட்டையை காட்டாததால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் தேர்தல் அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதால் காயம் அடைந்தார். கட்வா என்ற இடத்தில் வாக்குச் சாவடி முன்பு உடல்நலம் பாதித்து மயக்கம் அடைந்த பெண் ஒருவருக்கு மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் முதலுதவி அளித்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராடுகிறது. ஆட்சியை பிடித்து அரியணையில் அமர பாஜக போராடுகிறது. இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு 26, 29 ஆகிய தேதிகளில் 7,8ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன. மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும்.
கொரோனா பரவி வருவதால் முன்று கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.