Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மே.வ. தேர்தல்... பாஜகவுக்கு ஆப்பு வைக்கும் ஆதிர் செளத்ரி...மமதாவுக்காக சோனியாவின் அடேங்கப்பா வியூகம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அதிர்ச்சி தர வைக்கும் வகையில், மமதா பானர்ஜியின் வெற்றிக்கு சாதகமாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வியூகம் வகுத்திருக்கிறார். இந்த வியூகத்தின் முதல் படியாகவே மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி களமிறக்கப்பட்டிருக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எப்படியாவது மீண்டும் வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியோ, எதிர்க்கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் சிதறிக் கிடப்பதால் எப்படியும் மாஜி செங்கொடிகள் கோட்டையில் இம்முறை காவி கொடி நிச்சயம் என கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறது. இருந்தபோதும் பாரதிய ஜனதாவுக்குள்ளேயே இருக்கும் உட்கட்சி பூசல்களால் அக்கட்சியின் டெல்லி மேலிடமே மேற்கு வஙத்தை நினைத்து கொஞ்சம் திகைத்துப் போய் இருப்பதும் இன்னொரு நிதர்சனம்.

திரிணாமுல் வாக்கு சதவீதம்

திரிணாமுல் வாக்கு சதவீதம்

சரி மேற்கு வங்கத்தின் அரசியல் களம் எப்படி இருக்கிறது? திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கான செல்வாக்கு மிகப் பெரிய சரிவை எல்லாம் இதுவரை எதிர்கொள்ளவில்லை. 2019 லோக்சபா தேர்தலில் 43% வாக்குகளைப் பெற்றது திரிணாமுல். இத்தனைக்கும் 2014 தேர்தலை ஒப்பிடுகையில் 12 தொகுதிகளை இழந்தது திரிணாமுல். ஆனால் 2014ஐ ஒப்பிடுகையில் கூடுதலாக 5% வாக்குகளைப் பெற்றிருந்தது அந்த கட்சி.

பாஜகவுக்கு கிடைத்த வாக்குகள்

பாஜகவுக்கு கிடைத்த வாக்குகள்

பாரதிய ஜனதா கட்சிக்கு 30.1% வாக்குகள் கிடைத்தன. இந்த 30.1% வாக்குகளும் பாஜகவின் சொந்த வாக்குகள் அல்ல. இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் தனித்து நின்றதால் மிக எளிதாக ஜெயிக்கக் கூடிய குதிரையாக இதுவும் இருக்குமோ என்பதால் பாஜகவுக்கு விழுந்தவை. அதாவது காங்கிரஸ்- இடதுசாரிகளின் வாக்குகள் 2019-ல் பாஜகவுக்கு கிடைத்தது. திரிணாமுல் காங்கிரஸ் மீதான கடும்கோபத்தில் இடதுசாரிகளே பாஜகவினராக உருமாறிப் போன பேரவலத்தின் விளைவு இது. காங்கிரஸ் கட்சியினரும் இடதுசாரிகளும் கொள்கை எதிரியான பாஜகவுக்கு வாக்குகளை தயங்காமலேயே அள்ளிப் போட்டதால்தான் இந்த 30.1% வாக்குகள் என்பது.

காங்.இடதுசாரிகளின் 16% வாக்குகள்

காங்.இடதுசாரிகளின் 16% வாக்குகள்

இதனால்தான் காங்கிரஸ் கட்சியால் வெறும் 2 இடங்களில் வெல்ல முடிந்தது. இடதுசாரிகளால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவே முடியாமல் போன பரிதாபம் நிகழ்ந்தது. காங்கிரஸ் கட்சியானது 7.3%; இடதுசாரிகள் 9.9% சொந்த வாக்குகளைப் பறிகொடுத்தனர். பல இடங்களில் சொற்ப வாக்குகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றியை அறுவடை செய்தது. இதுதான் மேற்கு வங்கத்தில் பாஜகவின் காவி கொடி கடந்த லோக்சபா தேர்தலில் பட்டொளி வீசிப் பறந்ததன் பின்னணி. சரி இம்முறை இதே நிலைமைதான் இருக்கிறதா? நிச்சயம் இல்லை எனலாம்.

சோனியா- மமதா இணக்கம்

சோனியா- மமதா இணக்கம்

திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து ஒரே கூட்டணியாக அமைக்கப் போவதில்லை. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜிக்கும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவுக்கும் இடையே நல்ல புரிதல் இருந்து வருகிறது. பாஜகவுக்கு எதிரான அணி திரட்டல்களில் இருவரும் கை கோர்த்து செயல்படுவதில் தயக்கம் காட்டவில்லை. அண்மையில் கொரோனா, புதிய கல்வி கொள்கை, நீட்-ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக சோனியா கூட்டிய பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மமதாவும் பங்கேற்று முக்கியப் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான நெருக்கம் ஒருபக்கம் இருக்கிறது.

காங்கிரஸ்- இடதுசாரிகள்

காங்கிரஸ்- இடதுசாரிகள்

இன்னொரு பக்கம் காங்கிரஸ்- இடதுசாரிகள் இடையேயான புரிதல் நெருங்கியிருக்கிறது. வர இருக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியில் இடதுசாரிகளும் இணைந்திருக்கிறார்கள் என்பதே மிக முக்கியமான செய்தி. இந்த பின்னணியில்தான் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை காங்கிரஸ் தலைவர் சோனியா களமிறக்கி உள்ளார். மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை மாநில தலைவராக இருந்தவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. அவரது தலைமையின் கீழ் 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளைக் கைப்பற்றி எதிர்க்கட்சியாக சட்டசபையில் இருந்தது. மேற்கு வங்கத்தின் களநிலவரங்களை அத்துப்படியாக அறிந்தவர்.

மமதாவுக்கான சோனியாவின் கணக்கு

மமதாவுக்கான சோனியாவின் கணக்கு

அப்படியான ஒருவரை சோனியா களமிறக்குகிறார் எனில் அதில் பின்னணி வியூகம் இல்லாமல் எப்படி இருக்கும்? களத்துக்கு வந்த உடனேயே ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசத் தொடங்கியிருப்பது இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி குறித்துதான். இழந்துவிட்ட வாக்கு வங்கியை அதிகரிப்போம் என சூளுரைத்திருக்கிறார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. கடந்த தேர்தலில் கைகூடாமல் போய்விட்ட இந்த முயற்சியை எப்படியும் இம்முறை நிகழ்த்திக் காட்டுவார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி என நம்புகிறார் சோனியா. இதனால் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ்- இடதுசாரிகள் என்கிற மும்முனைப் போட்டி உருவாகும். இந்த மும்முனைப் போட்டியை வலிமையாக உருவாக்குவதுதான் சோனியாவின் வியூகமே. இதன் மூலம் பாஜகவுக்கான வாக்கை சரியச் செய்து மமதாவை எளிதாக வெல்ல வைக்க முடியும் என்பது சோனியாவின் கணக்கு.

மீட்டெடுக்கப்படும் 16% வாக்குகள்

மீட்டெடுக்கப்படும் 16% வாக்குகள்

ஏனெனில் காங்கிரஸ்- இடதுசாரிகள் இணைந்து ஒரு கூட்டணியாக நின்றால் இந்த இரு கட்சிகளும் கடந்த காலத்தில் தொலைத்த -அதாவது பாஜகவுக்கு வாரிக் கொடுத்த 16% வாக்குகளை மிக எளிதாக திரும்பப் பெற்றுவிட முடியும். அத்துடன் அடிபட்ட புலிகளாக இருக்கும் இடதுசாரிகள் இம்முறையாவது மேற்கு வங்கத்தில் கணிசமான இடங்களைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளனர். கடந்த தேர்தல்களைப் போல தங்களது வாக்கு வங்கியை அப்படியே பாஜகவாக உருமாற்றிக் கொண்டு அள்ளிக் கொடுத்துவிட்டு தமக்கு தாமே மண்ணை தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டு புதைகுழியில் புதைந்து சாகவும் அந்த கட்சி விரும்பாது. இது பாரதிய ஜனதா கட்சியின் 30.1% வாக்கு வங்கியில் மரண அடியைத்தான் தரும். ஆகக் குறைந்தபட்சம் காங்- இடதுசாரிகள் கடந்த முறை அள்ளிக் கொடுத்த 16% வாக்குகள் பறிபோனாலே பாஜகவுக்கு மரண பங்கம்தான்.

பாஜகவுக்கு ஆப்பு

பாஜகவுக்கு ஆப்பு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இயல்பாகவே தமது வாக்கு வங்கியை சிந்தாமல் சிதறாமல் தக்க வைத்துக் கொள்ளும். அது ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும் உதவும். இப்படி காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி உருவாகி இருந்திருந்தால் 2019 லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவால் கொக்கரித்திருக்க முடியாது. இதனைத்தான் 2019- தேர்தல் முடிவுகளின் போதே மமதா பானர்ஜி சுட்டிக்காட்டியும் இருந்தார். எதிர்க்கட்சிகள் பிரிந்து நின்று பாஜகவுக்கு வாக்குகளை தாரைவார்த்துவிட்டார்கள்; எங்களை எதிர்ப்பதாக நினைத்து எதிரியை வளர்த்துவிட்டார்கள் என சாடியிருந்தார். திரிணாமுல் காங்கிரஸ் தமக்கான வாக்கு வங்கியில் கவனம் செலுத்தி தக்க வைப்பது, காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணியானது பாஜகவிடம் இழந்த வாக்குகளை மீட்டெடுப்பது என்ற இரு வியூகங்கள்தான் பாஜகவை ஓடவிடப்போகிறது.

சாதிப்பாரா ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

சாதிப்பாரா ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

இந்த வியூகத்தை கனகச்சிதமாக செய்யக்கூடியவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி என்பதாலேயே சோனியா அட்டாகசமாக அவரையே மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்கி தேர்தல் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார். இந்த வியூகங்களை பாஜகவும் உணராமல் இருக்காது. அதுவும் ஊர் உலகில் இருக்கிற அத்தனை வியூகங்களையும் வகுத்துச் செயல்படவே முனையும்... ஆனால் அதெல்லாம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி முன்பாக எடுபடுமா? எட்டாத தொலைவுக்கு பறந்து போகுமா? என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லக் காத்திருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+