திமுக ஆட்சியை விட..மே.வங்கத்தில் ஆளுநருக்கு இனி பல்கலைக் கழக வேந்தர் பதவியே கிடையாது-மமதா அதிரடி!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவிகள் ஆளுநரிடம் இருந்து பறிக்கப்பட்டு மாநில முதல்வருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்தியில் ஆளும் கட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் குடைச்சல் கொடுப்பது என்பது முன்னெப்போதும் இல்லாததைவிட அதிகரித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், தெலுங்கானா மாநிலங்களில் இந்த பஞ்சாயத்து தொடர் கதையாகி வருகிறது.

சர்ச்சை ஆளுநர்கள்
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநருக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே பகிரங்கமாக மோதல்கள் வெடித்து கொண்டே இருக்கின்றன. நாகாலாந்து ஆளுநராக இருந்து அரசு நிர்வாகத்தில் தலையிட்டு சர்ச்சையில் சிக்கியவர் ஆர்.என்.ரவி. தற்போது தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, ஆளும் திமுக அரசுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். ஒப்புதல் தர வேண்டிய 20-க்கும் மேலான மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கிறார். இதேபோல் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை ஒட்டுமொத்தமாகவே ஆளும் டி.ஆர்.எஸ்.கட்சி புறக்கணித்து கொண்டே இருக்கிறது.

தமிழக மசோதா
இப்படியான ஆளுநர்- மாநில அரசுகள் மோதலைத் தொடர்ந்து ஆளுநருக்கான அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. தமிழகத்தில், ல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், கொள்கை முடிவு எடுக்கும் அரசுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லாதது உயர்கல்வியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கலந்தாலோசித்து துணைவேந்தரை நியமிப்பது மரபாக இருந்துவந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகங்களில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. இது மக்களாட்சித் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது என கூறியிருந்தார்.

வேந்தர் பதவி
தற்போது மேற்கு வங்க மாநில அரசு புதிய அதிரடியில் இறங்கி உள்ளது. நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் உள்ளனர். மாநிலங்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பல்கலைக் கழக வேந்தர்கள் பதவியை மாநில முதல்வர்களே வகிக்க வேண்டும் என்பது நீண்டகால குரல்.

மே.வங்க அமைச்சரவை ஒப்புதல்
இதனைத்தான் இப்போது மேற்கு வங்க அரசு கையில் எடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவியை ஆளுநரிடம் இருந்து பறித்து- இனி மாநில முதல்வரே பல்கலைக் கழக வேந்தராக இருப்பார் என்கிற தீர்மானத்துக்கு மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அம்மாநில சட்டசபையில் இது தொடர்பான மசோதாவும் நிறைவேற்றப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications