மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி.. குற்றவாளிக்கு மரண தண்டனை தர வலியுறுத்தல்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், குற்றவாளிக்கு மரண தண்டனையும் வழங்க வேண்டும் என்று மம்தா வலியுறுத்தினார்.
கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதாகும் பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 33 வயதாகும் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பிரச்சனை ஒருபுறம் எனில், சுதந்திரதினத்தன்று அதிகாலையில் போராட்டக்காரர்கள் போல மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் பயங்கரமாக தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த மருத்துவ சாதனங்களை சேதப்படுத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்கினார்கள். இதில் 15 போலீஸார் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் உடனடியாக ஆளுநரை சந்தித்து அசாதாரண சூழல் நிலவுவதால் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே கொல்கத்தாவில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை கொலை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கடும் நெருக்கடியில் உள்ள மம்தா பானர்ஜி மக்களின் கோபத்தை தணிப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார். அதன் ஒரு பகுதியாக, பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனையும் வழங்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
இது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “கொல்கத்தா சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் உண்மையை மறைக்க முயற்சிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும். ஆனால் அதற்கு பதில் சிலர் மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இடதுசாரிகளும், பாஜகவும் மேற்கு வங்கத்தில் வங்கதேச பாணியில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சிபிஎம் கட்சியும், பாஜகவும் தான் அடித்து நொறுக்கினார்கள் என்பது எனக்கு தெரியும். நள்ளிரவு 12-1 மணிக்குள் அவர்கள் அங்கு சென்ற வீடியோக்கள் உள்ளன. பாஜகவினர் தேசிய கொடியுடன் அங்கு சென்றுள்ளார்கள். அவர்கள் தேசியக் கொடியை அவமதித்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் இடதுசாரிகளுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள தொடர்பை நிச்சயம் அம்பலப்படுத்த வேண்டும்” என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.












Click it and Unblock the Notifications