என்னது 'பரமாத்மா'வே தியானம் செய்வதா? கேமராவோடு மட்டும் போகட்டும்.. மோடியை எச்சரித்த மமதா பானர்ஜி!
கொல்கத்தா: தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 45 மணி நேரம் தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.

லோக்சபா தேர்தல் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1-ந் தேதி நடைபெறும் நிலையில் மோடி தியானம் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ் இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திமுக சார்பில் கன்னியாகுமரி தேர்தல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் மனு தந்துள்ளது.
மேலும் தமிழர்களை திருடர்கள் என ஒடிஷா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தார். இதற்கு எதிராக மோடி வருகையின் போது கறுப்புக் கொடி காட்டுவோம் என அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் மோடியின் தியானம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியிருப்பதாவது: தியானம் செய்யப் போகிற யாராவது கேமராவுடன் போவார்களா? தியானம் செய்வதை யாராவது வீடியோ எடுப்பார்களா? வாக்குப் பதிவுக்கு 48 மணிநேரம் முன்னதாக தியானம் செய்ய நினைத்தால் ஏசி ரூமில் போய் தியானம் செய்ய வேண்டியதுதானே?
மோடியின் தியானம் தொடர்பாக எந்த கட்சியும் ஏன் பேச மறுக்கின்றன. விவேகானந்தர் தியானம் செய்த இடம் என்பதால் மோடியும் தியானம் செய்யப் போகிறேன் என்கிறாரே.. மோடிதான் தன்னை பரமாத்மா என்கிறாரே.. அப்புறம் எதற்காக தியானம் செய்கிறாராம்?
மோடியின் தியானத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்போம். அது அப்பட்டமான தேர்தல் நடத்தை மீறலாகும். இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications