மம்தா தொகுதியில் 700 செயற்கை விரல்கள்? "கள்ள ஓட்டு போடும் திரிணாமுல்.." போட்டோவுடன் வந்த பாஜக
கொல்கத்தா: மேற்கு வங்கச் சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பவானிபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செயற்கை விரல்களைப் பயன்படுத்தி கள்ள ஓட்டுப் போட முயல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சுமத்தியுள்ள புகார் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத் தேர்தலின் க்ளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. 142 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இருப்பினும், காலை முதலே அங்குப் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் மேற்கு வங்கத்தில் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.

மேற்கு வங்கம்
இன்று 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தாலும் கூட அனைவரின் பார்வையும் பவானிபூர் தொகுதியின் மீதுதான் உள்ளது. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜியும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரியும் போட்டியிடுகிறார்கள். கடந்த முறையே நந்திகிராம் தொகுதியில் மம்தாவை இதே சுவேந்து அதிகாரி தான் வீழ்த்தி இருந்தார். இதனால் இந்த தொகுதியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே சுவேந்து அதிகாரி இன்று காலை ஒரு 'பகீர்' புகாரை முன்வைத்துள்ளார். அதாவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செயற்கை விரல்களை பயன்படுத்தி கள்ள ஓட்டுப் போட முயல்வதாக அவர் பகீர் புகாரை முன்வைத்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, "பவானிபூர் தொகுதியில் கள்ள ஓட்டுப் போடுவதற்காகத் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் சுமார் 700க்கும் மேற்பட்ட செயற்கை விரல்களை ரெடி செய்துள்ளார்.
செயற்கை விரல்கள்
இந்த விரல்களைப் பயன்படுத்தித் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் செயல். இதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், பூத் லெவல் அதிகாரிகள் வழங்கிய 3,810 பூத் ஸ்லிப்புகள் விநியோகிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பான சில ஆதாரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சுவேந்து அதிகாரியின் இந்தப் புகாரைத் திரிணாமுல் காங்கிரஸ் அடியோடு மறுத்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அரூப் சக்ரவர்த்தி கூறுகையில், "ஜனநாயக நாட்டில் இதெல்லாம் சாத்தியமா? இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனையான புகார். தோல்வி பயத்தில் பாஜக இதுபோன்ற அபத்தமான கதைகளைக் கட்டி விடுகிறது. இதற்குப் பதில் சொல்லக் கூட நாங்கள் விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.
மம்தா கோட்டை
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 142 தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸின் பலமான கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில், இந்த 142 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் 123 இடங்களை மொத்தமாக அள்ளியது. பாஜகவால் 18 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. ஏப்ரல் 23-ம் தேதி முதற்கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், இன்று நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்தல் மம்தா பானர்ஜியின் அரசியல் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு அக்னிப் பரீட்சையாகப் பார்க்கப்படுகிறது.
வினோதம்
தேர்தல் களம் சூடுபிடிக்கும்போது புகார்கள் எழுவது சகஜம் என்றாலும், 'செயற்கை விரல்கள்' என்ற சுவேந்து அதிகாரியின் புகார் சற்று விசித்திரமாகவே இருக்கிறது.. பவானிபூரில் மம்தாவுக்கும் சுவேந்துவுக்கும் இடையிலான இந்த நேரடிப் போரில், மக்களின் உண்மையான விரல்கள் யாருக்கு வாக்களித்தன என்பது மே 4-ம் தேதி தெரிந்துவிடும்!














Click it and Unblock the Notifications