முதுபெரும் இடதுசாரி தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா கவலைக்கிடம்- மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வரும் முதுபெரும் இடதுசாரி தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா முதுமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேற்கு வங்க இடதுசாரி அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக பணியாற்றிய மூத்த தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்க மாநில முதல்வராக 2000-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தார். 2015-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கினார் புத்ததேவ். முதலில் சிபிஎம் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பதவியையும் பின் மாநில செயற்குழு உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் புத்ததேவ்.

தற்போது 79 வயதாகும் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு முதுமையால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் இருந்தன. அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள புத்ததேவ், சுயநினைவையும் இழந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சேன்று புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஜோதிபாசுக்கு பிந்தைய மேற்கு வங்க அரசியலில் புத்ததேவ் பட்டாச்சார்யா இடதுசாரிகளின் முகமாக திகழ்ந்தவர்.












Click it and Unblock the Notifications