மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து.. 7 பேர் பலி, 45 பேர் படுகாயம்
கொல்கத்தா: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாமுக்கு செல்லும் கவுஹாத்தி - பிகானர் விரைவு ரயில் மேற்கு வங்கத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மேற்கு வங்கத்தின் வடமாவட்டங்களில் ஒன்றான ஜல்பைகுரி மாவட்டம் மைனகுரி அருகே கவுகாத்தி-பிக்கானர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. ரயிலின் சுமார் 4 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 12 ரயில் பெட்டிகள் இதில் சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் மேலும் உயர வாய்ப்புள்ளதாக ரயிலில் பயணித்தோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக பல்வேறு வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மாலை 5 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்திற்கான காரணம் எதுவும் இப்போது வரை தெளிவாகத் தெரியவில்லை.
காயமடைந்தவர்களை சக பயணிகளின் உதவியுடன் அக்கம் பக்கத்தினர் மீட்டு வருகின்றனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மேலும், நிவாரண ரயில் ஒன்றையும் சம்பவ இடத்திற்கு ரயில்வே அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக இந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், "திடீரென ரயில் முதலில் குலுங்கத் தொடங்கியது. அதன் பின்னர் சில பெட்டிகள் கவிழ்ந்தன. உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்" என்றார்.
தடம் புரண்ட பெட்டிகளுக்குள் பல பயணிகள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் கட்டர்கள் கொண்டு பெட்டிகள் வெட்டப்பட்டும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து ரயில்வே உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் டிஜி ஆகியோர் டெல்லியில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ₹5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ₹1 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு ₹25,000ம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்டறிந்தார். ஜல்பைகுரி மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் பேசிய மம்தா பானர்ஜி, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விளக்கினார்.












Click it and Unblock the Notifications