"மறு ஆய்வு" என்ற வார்த்தையை திடீரென மோடி பயன்படுத்த என்ன காரணம்?
ரூபாய் நோட்டு ஒழிப்பு தொடர்பாக மறு ஆய்வு என்ற வார்த்தையை இத்தனை நாட்கள் கழித்து இன்று பிரதமர் மோடி பயன்படுத்த என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு ஒழிப்பு தொடர்பாக நாடு முழுவதும் பெரும் குழப்பம் நிலவி வந்தபோதிலும் கூட தனது முடிவில் தீவிரமாக இருந்து வந்த பிரதமர் மோடி திடீரென "மறு ஆய்வு" குறித்து பேசியிருப்பது பலவிதமான யூகங்களைக் கிளப்பியுள்ளது.
பிரதமர் மோடி ஏன் திடீர் என இப்படிப் பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மோடியின் இந்த பூடகப் பேச்சுக்கு 3 முக்கியக் காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிலும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் வழக்குகள் குவிந்துள்ளன. இதைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கோரியது. ஆனால் அதை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. மேலும் நாட்டில் கலவரச் சூழல் எழுந்துள்ளதாகவும், மத்திய அரசின் செயலை எதிர்த்து வழக்குகள் தொடருவதை தடுக்க முடியாது என்றும் எச்சரித்து விட்டது.
இது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளதாக கருதப்படுகிறது. மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கடுமையான தீர்ப்பு வந்து விட்டால் சங்கடமாகி விடும் என்று பாஜக கருதுகிறது.
2வது முக்கிய காரணம் - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக திரண்டு நின்று கடுமையாக காட்டி வரும் எதிர்ப்பு. நாடாளுமன்றத்தை நடத்த முடியாத நிலைக்கு எதிர்க்கட்சிகள் கொண்டு சென்று விட்டன. மக்களே பாருங்கள், இவர்களை என்று பொத்தாம் பொதுவாக கூறி விட்டு வழக்கம் போல தப்பவும் முடியாத நிலை. காரணம், மக்களுக்காகத்தான் இம்முறை எதிர்க்கட்சிகள் மொத்தமாக போராட்டத்தில் குதித்துள்ளன என்பதால்.
3வது முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவென்றால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பில் உடன்பாடு இல்லை என்பதாகும். சமீபத்தில் ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜியை மோடி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது பிரணாப் தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளியிட்டதாக பேச்சு அடிபடுகிறது. இதுதான் மோடியை நிறையவே யோசிக்க வைத்து விட்டதாம்.
பிரணாப் முகர்ஜி மத்திய நிதியமைச்சராக இருந்தவர். பல பட்ஜெட்டுகளைப் போட்ட அனுபவசாலி. அதை விட பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்தவரும் கூட. எனவே அவர் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியதாக கருதப்படுகிறது.
இப்படி பல்வேறு நெருக்கடிகளுக்குப் பிறகுதான் மோடி இன்றைய தனது ஆக்ரா பேச்சின்போது Review என்ற வார்த்தையைப் பயன்படுத்த நெருக்கியிருக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications