இந்திய "பிஸ்னஸ் மேன்" நேபாள அரசியலில் செய்த சம்பவம்.. நேபாள பிரதமர் சொன்ன பரபர கருத்து! மெகா சர்ச்சை
காத்மண்டு: இந்திய பிஸ்னஸ்மேன் ஒருவர் நேபாள அரசியலில் தலையிட முயன்றதாக அந்நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு அருகே அமைந்துள்ள குட்டி நாடு நேபாளம். இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் கடந்த பல காலமாக நல்ல உறவே இருந்துள்ளது. இருப்பினும், சில ஆண்டுகளாக ராமர் விவகாரம் எனச் சிறு சிறு மோதல்கள் உருவானது.

இப்போது நேபாள பிரதமராகப் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா இருக்கிறார். இதற்கிடையே இந்திய பிஸ்னஸ்மேன் ஒருவர் குறித்து அந்நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சர்ச்சை கருத்து: அதாவது ஒரு முறை நேபாளத்தில் செட்டிலான இந்தியத் தொழிலதிபர் ஒருவர் தன்னை பிரதமராக்க முயன்றதாக அந்நாட்டின பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தெரிவித்திருந்தார். இது அங்கே அரசியல் ரீதியாக மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. புஷ்ப கமல் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "நேபாளத்தில் ஒரு முன்னோடி டிரக்கிங் தொழிலதிபராகச் சர்தார் பிரீதம் சிங் இருக்கிறார். அவர் நேபாள-இந்தியா உறவுகளை மேம்படுத்துவதில் ஒரு சிறப்பு மற்றும் வரலாற்றுப் பங்கைக் கொண்டிருந்தார். முன்பு ஒரு முறை என்னைப் பிரதமராக்க வேண்டும் என்பதற்காகச் சர்தார் பிரீதம் சிங் தனிப்பட்ட முறையில் முயன்றிருக்கிறார்.
டெல்லி சென்று: இதற்காக அவர் பலமுறை டெல்லி சென்றுள்ளார். என்னைப் பிரதமராக்க காத்மாண்டுவில் அரசியல் தலைவர்கள் உடனும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேபாள-இந்தியா உறவுகளை மேம்படுத்துவதில் பிரீதம் சிங் ஒரு சிறப்பான மற்றும் வரலாற்றுப் பங்காற்றியுள்ளார்" என்று அவர் தெரிவித்தார். இந்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில், பல்வேறு தரப்பினரும் பிரதமரை விமர்சித்து வருகின்றனர்.
பிரதான எதிர்க்கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-(யுனிஃபைட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பிரதமர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கேபி சர்மா ஒலி பேசுகையில், "பிரதமர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். எங்களுக்கு வேண்டியது விளக்கமல்ல. அவரது ராஜினாமா கடிதம். தேசிய சுதந்திரம், கண்ணியம், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் அவரது கருத்துகள் அமைந்துள்ளது" என்றார்.
எதிர்ப்பும் விளக்கமும்: டெல்லியால் நியமிக்கப்பட்ட ஒருவர் நேபாள நாட்டின் பிரதமராகத் தொடர எந்தவொரு உரிமையும் இல்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி கூட்டணிக் கட்சித் தலைவர்களும் நேபாள பிரதமரின் இந்தக் கருத்தை விமர்சித்துள்ளனர். பிரதமர் தவறான கருத்துகளைக் கூறியுள்ளதாகவும் இதற்கு எதிர்க்கட்சிகள் அவரை விமர்சிப்பது தவறு தான் என்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களே கூறியுள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் பிரதமர் புஷ்ப கமல் தனது பேச்சுக்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "எனது பேச்சைத் தவறாகத் திரித்துவிட்டார்கள். பிரீதம் சிங் தொழில் மற்றும் சமூக சேவையில் மட்டுமின்றி அரசியலிலும் ஆர்வம் கொண்டவர் என்பதை உணர்த்தவே நான் இப்படிப் பேசினேன். நாட்டின் நலனுக்காக அவர் டெல்லி மற்றும் நேபாளத்தில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதையே நான் குறிப்பிட்டேன்" என்றார்.
என்ன சொன்னார்: பிரதமரின் சர்ச்சை கருத்துகள் குறித்து கூட்டணியில் இருக்கும் சிபிஎன்- மாவோயிஸ்ட் மையத்தின் கணேஷ் ஷா, "என்னைப் பொறுத்தவரை நேபாள அரசியலில் இந்தியா தலையிடுவதாகப் பிரதமர் கூறினார் என நான் கருதவில்லை. ஆனால், இதுபோன்ற முக்கியமான விஷயம் குறித்துப் பேசும் போது அவர் இன்னும் எச்சரிக்கையுடன் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
நேபாள பிரதமரின் இந்த சர்ச்சை கருத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications