3 வேளாண் சட்டங்கள் வாபஸ் நடைமுறை சிக்கல் என்ன? திரும்ப வருமா?
இந்தியாவில் மிகப்பெரிய போராட்டம் நடக்க காரணமாக இருந்த 3 வேளாண்சட்டங்களை அரசு திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளதை அரசு மனம் திருந்தி வாபஸ் பெற்றதாக ஒப்புக்கொள்ள முடியாது என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதே கருத்தை அரசியல் கட்சி தலைவர்களும் வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இச்சட்டத்தை வாபஸ் பெறுவதில் என்ன நடைமுறை வேண்டும் என்பதும் முறைப்படி நாடாளுமன்றத்தில் வாபஸ் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
அதிரடியாக அறிவிக்கப்பட்ட 3 வேளாண்சட்டங்கள்
இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்கள்:
1.வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, 2020
2.விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020
3. அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020
மத்திய அரசு வேளாண் துறை தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றியது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அதே மாதத்தில் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததும் அவை சட்ட வடிவத்தைப் பெற்றன. அந்த சட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாய பொருள் கொள்முதலில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் சட்டம்
ஏற்கெனவே நாடுமுழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஏ.பி.எம்.சி. மண்டிகளுடன், தனியார் துறையினரும் ஒப்பந்த அடிப்படையில் வேளாண் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட இந்தச் சட்டங்கள் வகை செய்கின்றன. இது படிப்படியாக அரசின் பங்கை விலக்கி தனியார் கைகளில் கொள்முதல், சேமிப்பு செல்ல வழி வகுக்கும், இதனால் தனியார்களை சார்ந்து விவசாயிகள் நிற்கும் நிலை ஏற்படும், கொள்முதல் விலையையும் அவர்களே தீர்மானிப்பார்கள், வரம்பற்ற சேமிப்பு காரணமாக பொருட்கள் பதுக்கப்பட்டு செயற்கை பஞ்சம் ஏற்பட வாய்ப்பும், அதனால் தனியார் விலையை கூட்டி விற்கவும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்.
சிறு விவசாயிகள் படிப்படியாக பெரும் கார்பரேட் கைகளில் தஞ்சம் அடையும் வகையிலும், எதை பயிரிட வேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதை கார்பரேட்டுகளே தீர்மானிப்பார்கள், ஒப்பந்தம் போட்டு விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதால் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டால் நஷ்டத்துக்கு விவசாயிகள் பொறுப்பேற்கும் நிலை உள்ளிட்ட பல பாதக அம்சங்கள் இருந்ததால் விவசாயிகள் அதை எதிர்த்தனர்.
வெடித்தது பெரும் போராட்டம்
3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற எதிர்க்கட்சிகள் எடுத்த முயற்சி பெரும்பான்மை காரணமாக மத்திய அரசால் முறியடிக்கப்பட்டது. சட்டம் நிறைவேறியதால் பெரும் விவசாய போராட்டம் வெடித்தது. சுதந்திரப்போராட்டத்திற்கு பின் இவ்வளவு பெரிய போராட்டம், நீண்ட கால போராட்டம் நடந்திருக்குமா என்று எண்ணும் அளவுக்கு லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.
பஞ்சாப், ஹரியான வட மாநில விவசாயிகளின் வீரஞ்செரிந்த போராட்டம்
போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப், ஹரியானா மற்றும் வட மாநில விவசாயிகள் டெல்லியில் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டமாக முற்றுகை போராட்டத்தை மாற்றினர். எந்த அரசியல் கட்சிகளையும் அனுமதிக்காமல் முழுக்க முழுக்க விவசாயிகள் பங்கேற்ற போராட்டம் ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. 11 கட்ட பேச்சு வார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை.

கொரோனா காலத்திலும் உறுதி குறையா போராட்டம்
கடுமையான கொரோனா தொற்று இந்தியா முழுவதும் கடுமையாக பரவியது, ஆனாலும் விவசாயிகள் போராட்டம் நிற்கவில்லை. தலைநகர் டெல்லியை ஸ்தம்பிக்க வைத்தனர். இப்போராட்டங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 600 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். 18 விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டனர். போராட்டத்தை தடுக்க முடியாத மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டும் போராட்டம் தொடர்ந்தது. இது தவிர தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் 3 வேளாண்சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றின.
ஆதரித்த முந்தைய அரசும் எதிர்த்து தீர்மானம் போட்ட திமுக அரசும்
தமிழகத்தில் 3 வேளாண் சட்டங்களை அதிமுக அரசு கடுமையாக ஆதரித்தது. எதிர்த்த ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்களை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். அதன் பின் புதிதாக பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் கொண்டுவந்தார். இது தவிர நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் போராட்டம், பந்த் நடத்தின.
பல மாநிலங்களில் தோல்வி, மனம் மாறிய பாஜக
3 வேளாண் சட்டங்களை நியாயப்படுத்த பாஜக எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. பல மாநிலங்களில் இதற்கான பின்னடைவை பாஜக சந்தித்தது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் கர்நாடக முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே பாஜக தோல்வி அடைந்தது. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாவட்டங்களிலும் தோல்வியடைந்தது. இது பாஜகவின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
5 மாநில சட்டசபை தேர்தல் பாஜகவின் முன் உள்ள பிரச்சினை
அடுத்த ஆண்டு உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில் விவசாயிகள் பிரச்சினை கடுமையாக எதிரொலிக்கும் தேர்தல் முடிவுகளை அது தீர்மானிக்கும் என்பது வல்லுனர்களின் கருத்து. இது பாஜகவுக்கு பயத்தை கொடுத்த நிலையில் தற்போது 3 வேளாண்சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் அறிவித்துள்ளார் என்பது அரசியல் கட்சித்தலைவர்களின் கருத்தாக உள்ளது.
நடைமுறைச் சிக்கல் என்ன? திரும்ப வருமா?
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்து பிரதமர் அறிவித்தாலும் போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் மறுத்து வருகின்றனர். 3 வேளாண்சட்டங்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளதால் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் சட்டத்தை வாபஸ் பெற்றால் மட்டுமே இப்பிரச்சினை தீரும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால் போராட்டம் முடிவுக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நீக்க வேண்டும்
முதற்கட்டமாக இக்கூட்டத்தொடரில் இச்சட்டம் ரத்துச் செய்யப்படவேண்டும் என்பது முக்கியமான ஒன்று அது நடக்காமல் அறிவிப்பு மட்டுமே பயன்தராது என்பது தற்போதுள்ள முக்கியமான விஷயம். 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்தப்பின் மீண்டும் முழுவீச்சில் அரசு வேறு வடிவத்தில் இதே சட்டத்தை கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். காலம் தாழ்ந்து எடுக்கப்பட்ட முடிவுக்கு விவசாயிகளின் வீரஞ்செரிந்த போராட்டமும், 600 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர் தியாகமும் முக்கியமானது.












Click it and Unblock the Notifications