சீனுக்குள் வந்த "ரெட் டைரி!" கெலாட்டின் ஊழல் பட்டியல்? அதிரும் ராஜஸ்தான்! பெரிதாக பிளான் போடும் பாஜக
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்குள்ள ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ரெட் டைரி பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், அங்கு ரெட் டைரி ஒன்று அரசியல் களத்தில் மிகப் பெரிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது அங்குக் காங்கிரஸ்- பாஜக இடையே புது மோதலை வழிவகுத்துள்ளது.

ரெட் டைரி: இந்த ரெட் டைரி தான் ராஜஸ்தான் சட்டசபையில் புயல் கிளப்பியது. முன்னாள் அமைச்சரும் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்ட காங்கிரஸ் எம்எல்ஏவுமான ராஜேந்திர சிங் குதா, நேற்று சட்டசபைக்குள் நுழைந்து திடீரென ஒரு ரெட் டைரியை எடுத்துக் காண்பித்தார். இந்த டைரி முதல்வர் அசோக் கெலாட்டை அம்பலப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த அவை காவலர்களை அவரை வெளியேற்றினர்.
இருப்பினும் தன்னை மற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாக்கியதாகவும் தனது கையில் இருந்த டைரியை பிடுங்கி சில பக்கங்களைக் கிழித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜேந்திர சிங் குதா: முன்னாள் அமைச்சரான ராஜேந்திர சிங் குதா, சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் ராஜஸ்தான் அரசு தோல்வியடைந்துவிட்டதாகப் பரபர கருத்தை கூறியிருந்தார். மணிப்பூர் சம்பவத்தை நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இவர் கூறிய இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இதையடுத்து அன்று மாலையே அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
இவர் தான் இப்போது ரெட் டைரி விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார். இந்த ரெட் டைரியில் முதல்வர் கெலாட் குறித்த பல முக்கிய தகவல்கள் இருப்பதாக ராஜேந்திர சிங் கூறுகிறார். அந்த டைரி, முதல்வருடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் தர்மேந்திர ரத்தோருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
என்ன தகவல்கள்: கடந்த 2020இல் சச்சின் பைலட் தலைமையில் எம்எல்ஏகள் சிலர் கிளர்ச்சி செய்த நிலையில், தனது அரசைக் காப்பாற்றுவதற்காக கெலாட் தரப்பு எம்எல்ஏக்களுக்கு வழங்கிய பணம் குறித்த தகவல்கள் இதில் இருப்பதாக ராஜேந்திர சிங் கூறியுள்ளார்.
அதேபோல அங்கு நடந்த மாநிலங்களவை தேர்தலிலும் பா.ஜ.க ஆதரவு சுயேச்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரா கடும் போட்டி கொடுத்த போதிலும், காங்கிரஸ் தனது வேட்பாளர் வெற்றியை உறுதி செய்யக் கொடுத்த பணம் குறித்த தகவல்களும் இதில் இருக்கிறதாம். இப்படி முக்கிய தகவல்கள் இருப்பதால் இந்த ரெட் டைரியை எரிக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டதாக ராஜேந்திர சிங் கூறியுள்ளார்.
காங். மறுப்பு: இருப்பினும், ராஜேந்திர சிங் கருத்துகளைக் காங்கிரஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. பாஜகவின் பிளான்படியே ராஜேந்திர சிங் இப்போது செயல்படுவதாகவும் அவர் கூறுவதில் 1% கூட உண்மை இல்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு இறுதியில் அங்கு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இந்தச் சூழலில் இந்த ரெட் டைரி விவகாரம் காங்கிரஸுக்கு தலைவலியைக் கொடுத்துள்ளது. அதிலும் இதில் நேரடியாக கெலாட் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், இந்த விவகாரத்தைச் சீக்கிரம் முடிக்கவே காங்கிரஸ் விரும்புகிறது. இருப்பினும், பாஜக இதை வைத்தே தேர்தல் பிரசாரத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
யார் இந்த ராஜேந்திர சிங் குதா: இத்தனை பரபரப்பிற்கும் காரணமானவர் அங்கிருந்த ராஜேந்திர சிங் குதா.. ராஜேந்திர குதா உதய்பூர்வதி தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர். இதற்கு முன்பு இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். கடந்த 2019இல் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு மாறிய 6 எம்எல்ஏக்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications