"காங்கிரஸ் vs பாஜக.." ராஜஸ்தானில் எகிறிய வாக்குப்பதிவு.. பின்னணி என்ன! உண்மையில் இது யாருக்கு ஆதரவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த முறை வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம், கடந்த காலங்களில் வாக்குப்பதிவு எப்படி இருந்துள்ளது என்பதை நாம் பார்க்கலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த நவ. 25ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

அங்கே ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் சுமார் 75% வாக்குகள் பதிவானது. ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவானது பலருக்கும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் தேர்தல்: ராஜஸ்தானில் இந்தளவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது மீண்டும் அதே பழைய கேள்வியை எழுப்பி இருக்கிறது. அதாவது பொதுவாகத் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவானால் அது ஆளும் தரப்புக்கு எதிரான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதாவது ஆளும் அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் ஆட்சியை மாற்ற அவர்கள் திரண்டு வந்து வாக்களித்ததாகவே பொதுவாகக் கருதப்படும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரைக் கடந்த காலங்களில் முந்தைய தேர்தலைக் காட்டிலும் குறைந்த வாக்குகள் பதிவான 7 தேர்தல்களில் ஆளும் தரப்பு மூன்று முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அதேநேரம் முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவான 7 தேர்தல்களில் ஒரே ஒரு முறை மட்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டன. ஆனால், இவை அனைத்தும் 1990களில் நடந்தவை. அதன் பிறகு எந்தவொரு கட்சியாலும் அங்கே ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை.
கடந்த காலம்: ராஜஸ்தானில் கடந்த 1980கள் வரை அங்கே வாக்குப்பதிவு குறைவாகவே இருந்தது. அப்போது பெரும்பாலும் அங்கே காங்கிரஸ் ஆதிக்கம் தான் இருந்தது. இருப்பினும், 1980களுக்கு பிறகு அங்கே நிலைமை மாறியது. அதன் பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது.
மேலும் அங்கே வாக்குப்பதிவில் பாலின பாகுபாடும் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த 1962இல் ஆண்- பெண் வாக்காள்களிடையே 21.6% இருந்த வேறுபாடு, 2023இல் 0.2%ஆகக் குறைந்துள்ளது. அதேபோல மகளிர் வாக்குப்பதிவு என்பது 1962இல் 41.1% இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் அது 74.7%ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் ஆண்கள் வாக்குகள் என்பது மாறி மாறி அதிகரித்தும் குறைந்தும் வருகிறது.
பெண்கள் வாக்கு: இப்போது நடந்த ராஜஸ்தான் தேர்தலில் பெண்கள் அலை அலையாக வந்து வாக்களித்தார்கள் என்றே சொல்லலாம். அங்கே பல தொகுதிகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் வாக்குகள் அதிகம் பதிவாகி இருந்தது. இது ராஜஸ்தானில் மாறி வரும் அரசியலைச் சுட்டிக் காட்டுகிறது. சராசரியாக அங்கே ஆண்கள் வாக்குப்பதிவு 74.5%ஆக இருந்த நிலையில், பெண்கள் வாக்குப்பதிவு 74.7%ஆக பதிவாகியுள்ளது.
ஃபதேபூர், மாண்டவா உள்ளிட்ட சில தொகுதிகளில் இந்த இடைவெளி 10%க்கு மேல் இருந்துள்ளது. சக்வாரா, லச்மன்கர் மற்றும் பீம் உள்ளிட்ட தொகுதிகளில் இந்த வேறுபாடு 9%க்கு மேல் இருந்துள்ளது. அங்குள்ள 199 சீட்களில் 86 இடங்களில் பெண்களின் வாக்குகள் என்பது ஆண்கள் வாக்குகளைக் காட்டிலும் கணிசமாக அதிகரித்துள்ளது. சில தொகுதிகளில் ஆண்கள் வாக்குகள் அதிகமாக இருந்தாலும் கூட அவை இந்தளவுக்கு அதிகமாக இல்லை.
உணர்த்துவது என்ன: ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது ராஜஸ்தான் தேர்தலில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் வாக்களித்துள்ளது தெரிகிறது. இது ராஜஸ்தானின் அரசியல் களம் மாறி வருவதையே காட்டுகிறது. அதேநேரம் இந்த வாக்குகள் ஆளும் கெலாட் அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களுக்கு விழுந்த வாக்குகளா, இல்லை அங்கே பெண்களுக்காக காங். அரசு எதுவும் செய்யவில்லை என்று பிரச்சாரம் செய்த பாஜகவுக்கு ஆதரவாக விழுந்த வாக்குகளா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications