கோவாவில் நைஜீரியர்கள் சர்ச்சை.. இனவெறியா? போதைப் பொருள் விவகாரமா?
பனாஜி: கோவாவில் நைஜீரியர்களுக்கு எதிராக எழுந்திருக்கும் உணர்வுகள் போதைப் பொருள் கடத்தல் தொடர்புகள் மீதான வெறுப்பா? அல்லது இனவெறியா என்ற சூடான விவாதம் சமூகவலைதளங்களில் ரெக்கை கட்டி பறக்கின்றன.
இந்தியாவில் சுமார் 50 ஆயிரம் நைஜீரியர்கள் வாழ்கின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமலும் ஆயிரக்கணக்கான நைஜீரிய நாட்டவர் வாழ்கின்றனர்.
இந்தியாவில் கைது செய்யபட்ட நைஜீரிய நாட்டவர்கள் பெரும்பாலும் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். சுற்றுலா மாநிலமான கோவாவில் போதைப் பொருள் புழக்கம் அதிகம். அங்கும் நைஜீரியர்கள் நூற்றுக் கணக்கில் வாழ்கின்றனர்.
இந்நிலையில்தான் கோவாவில் நைஜீரியர் ஒருவர் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நைஜீரிய நாட்டவர் வன்முறையில் இறங்கினர். இதனால் கோவா மாநில மக்கள் நைஜீரியர்களுக்கு எதிராக உள்ளனர்.
தற்போது நைஜீரியர்களை மிக மோசமாக விமர்சித்து அம்மாநில அமைச்சர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். நைஜீரியர்கள் கோவாவை பிடித்த புற்றுநோய்...காட்டு விலங்குகள் என்றெல்லாம் கூட ஒரு அமைச்சர் பேசியிருக்கிறார்.
அதேபோல் நைஜீரியர்களுக்கு கோவாவில் எவரும் தங்க வீடு கொடுப்பதில்லை..ஹோட்டல்களிலும் இடம் கொடுப்பதில்லை என்று ஏகமனதாக முடிவெடுத்திருக்கின்றனர். அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலோ நைஜீரியர்கள் மீதான தாக்குதலுக்கு நிறவெறியே காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.
அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் இயக்கத்தின் தலைவரான கவிதா கிருஷ்ணன் தமது ட்விட்டர் பக்கத்தில், கோவாவில் ஒரு நைஜீரியர் கொலை, பஞ்சாபில் ஒரு ஆப்பிரிக்க நாட்டவர் தாக்கப்பட்டு கோமா நிலையில் இருக்கிறார்.. இந்தியாவின் இந்த இனவெறித் தனத்துக்கு வெட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதேபோன்ற குரல்கள் ஏகத்துக்கும் எதிரொலிக்கின்றன.
நைஜீரியர்களோ, எங்கள் நாட்டில் நீங்கள் குடியேறி கோடீஸ்வரர்களாக வசிக்கின்றீர்களே..நாங்கள் படிக்கவும் வாழவும் இந்தியாவுக்கு வந்துள்ளமே என்று குமுறுகின்றனர். கோவாவில் மையம் கொண்டிருக்கும் இந்த சர்ச்சை நாடு முழுவதும் வெடிக்காமல் இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications