2014-ல் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற பாடுபடுவேன்: நரேந்திர மோடி
டெல்லி: 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை வெற்றியைப் பெற பாடுபடுவேன் என்று குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் நேற்று பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் நரேந்திர மோடி கூறியதாவது:
சாதாரண தொண்டனான எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் பல்வேறு நிலைகளில் சாதாரண ஊழியனாக பணியாற்றியுள்ளேன். கடவுள் எனக்கு மிகுந்த பலத்தை அளித்துள்ளார். அனைவரது எதிர்ப்பார்பையும் நிறைவேற்றுவேன். கடினமான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. சிக்கலான நிலையிலுள்ள நாடு பாஜகவிடம் தீர்வை எதிர்பார்க்கிறது.
எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். வரும் 2014ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். மக்களிடமும், தொண்டர்களிடமும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த பாடுபடப்போகிறேன்.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அகற்ற கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பிரசாரத்தை துவங்குவோம். ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம். பா.ஜ.,வின் வெற்றிக்காக எந்த ஒரு முயற்சியையும் நான் கைவிடப்போவதில்லை என்றார்.