‛மோடியின் வார்த்தை’.. 30 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீநகரில் உயர்ந்த ஓட்டு பதிவு! 370வது சட்ட நீக்கம் காரணமா?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டு சதவீதம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்கியதற்கு பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே ஸ்ரீநகர் தொகுதி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தான் ஓட்டு சதவீதம் அதிகரித்ததன் பின்னணி காரணம் பற்றி பிரதமர் மோடி பெருமையோடு விளக்கி உள்ளார்.
நாடு முழுவதும் நேற்று 4வது கட்ட லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் 25, தெலுங்கானாவில் 17, உத்தர பிரதேசத்தில் 13, மகாராஷ்டிராவில் 11, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 8, பீகாரில் 5, ஒடிசா, ஜார்கண்ட்டில் தலா 4, ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 67.25 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று இரவு 11. 45 மணிக்கு அறிவித்தது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 78.37 சதவீதம், அதற்கு அடுத்தப்படியாக ஆந்திராவில் 76.50 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் ஜம்மு காஷ்மீர் தேர்தல் தான். அதாவது ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, மாநில அங்கீகாரம் ரத்து உள்ளிட்டவற்றுக்கு பிறகு முதல் முதலாக நடந்த லோக்சபா தேர்தல் இதுவாகும். இதனால் இந்த தேர்தலில் ஓட்டு சதவீதம் எந்த அளவுக்கு பதிவாகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக அமைந்தது.
இந்நிலையில் தான் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் ஓட்டு சதவீதம் என்பது கிடுகிடுவென அதிகரித்துள்ளது. நேற்று இரவு 11.45 மணியளவில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 37.98 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அதாவது சுமார் 38 சதவீத ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான அதிகபட்ச ஓட்டு சதவீதமாகும்.
அதாவது ஸ்ரீநகர் லோக்சபா தொகுதி கடந்த 1989ல் உருவானது. அந்த தேர்தலில் 5 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானது. அதன்பிறகு 1996 தேர்தலில் 41 சதவீத ஓட்டு பதிவானது. இதுதான் ஸ்ரீநகர் தொகுதியில் பதிவான அதிகபட்ச ஓட்டாகும். அதன்பிறகு 1998 தேர்தலில் 40.9 சதவீத ஓட்டு பதிவானது. அதன்பிறகு ஓட்டு சதவீதம் என்பது சரிய தொடங்கியது.
1999 தேர்தலில் ஓட்டு சதவீதம் என்பது 11.9 சதவீதமாக குறைந்தது. 2004ல் 18.6 சதவீதம், 2009ல் 25.6 சதவீதம், 2014ல் 258 சதவீதம், 2019ல் 14.43 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. ஆனால் இப்போது 2024 லோக்சபா தேர்தலில் 37.98 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அதன்படி பார்த்தால் 1999 லோக்சபா தேர்தலுக்கு பிறகு ஸ்ரீநகரில் இப்போது தான் ஓட்டு சதவீதம் என்பது அதிகரித்துள்ளது. அதோடு ஸ்ரீநகர் லோக்சபா தேர்தலில் 3வது அதிகபட்ச ஓட்டு சதவீதம் இதுவாகும்.
மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய பிறகு மக்கள் அதிகளவில் வந்து ஓட்டளித்து உள்ளனர். இதனால் இந்த ஓட்டு சதவீதம் உண்மையில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் ஸ்ரீநகர் தொகுதியில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது பற்றி பிரதமர் மோடி பெருமையாக கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியி்ல முன்பை விட மக்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். இதற்காக அவர்களை பாராட்ட விரும்புகிறேன். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் மக்கள் செயல்பாடு மற்றும் விருப்பம் முழுமையாக கண்டறிய முடிகிறது. இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் நல்லது'' என பெருமையாக கூறியுள்ளார்.
அதேபோல் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் மக்கள் பெருமளவு வந்து ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தி உள்ளனர். ஓட்டுப்பதிவை சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க உதவிய அனைத்து தரப்பினரின் கடனி உழைப்பையும் நான் பாராட்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்ரீநகர் லோக்சபா தொகுதி என்பது ஸ்ரீநகர், காண்டர்பல், புல்வாமா, புத்கார் மற்றும் சொபியான் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்கு மொத்தம் 17.48 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஸ்ரீநகர் லோக்சபா தொகுதி என்பது பரூக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் கோட்டையாகும்.
இந்த தொகுதிக்கு மொத்தம் 13 முறை லோக்சபா தேர்தல் (இடைத்தேர்தல்கள் உள்பட) நடந்துள்ளது. இதில் 10 முறை ஜம்மு காஷ்மீரின் பரூக் அப்துல்லாவின் கட்சி தான் வென்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில் பரூக் அப்துல்லா வெற்றி பெற்றார். அதற்கு முன்பு அவரது மகன் ஓமர் அப்துல்லா, ஓமர் அப்துல்லாவின் தாய் பேகம் அக்பர் உள்ளிட்டவர்கள் இந்த தொகுதியில் மாறி மாறி வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் பரூக் அப்துல்லா போட்டியிடவில்லை. அவருக்கு பதில் ஷியா தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆக ருகுல்லா மெஹதி போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து பிடிபி கட்சி சார்பில் இளம் தலைவராக அறியப்படும் வாகேத் களமிறங்கி உள்ளார். மேலும் அப்னி கட்சி சார்பில் முகமது அஷ்ரப் மிர் ஆகியோர் போட்டியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications