எனக்கு பாரதரத்னா வேண்டாம்.. நிராகரித்த வாஜ்பாய்.. 1999ல்!
டெல்லி: கடந்த 1999ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்க பாஜக முயற்சிகளை எடுத்தபோது தனக்கு பாரதரத்னா விருது வேண்டாம் என மறுத்து விட்டார் வாஜ்பாய் என்று வாஜ்பாயியின் முன்னாள் பத்திரிகை ஆலோசகர் அசோக் டான்டன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 90வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் பரிந்துரையின்பேரில் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அளிக்கப்படுகிறது.
ஆனால் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது தர 1999ம் ஆண்டே பாஜக முயற்சி எடுத்திருந்தது. ஆனால் அப்போது அந்த முயற்சிகளை வாஜ்பாய்தான் தடுத்து விட்டார்.

இதுகுறித்து மூத்த பத்திரி்கையாளர் அசோக் டான்டன் கூறுகையில், கார்கில் போருக்குப் பின்னர், வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது தர வேண்டும் என்று பாஜக தலைவர்கள் எண்ணினர். 1998ம் ஆண்டு அணு சோதனை நடத்தியதற்குப் பின்னர், அதைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலில் பாஜக வென்றது என வாஜ்பாயின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்திருப்பதாக பாஜகவினர் கருதினர். மேலும் கார்கில் போரில் இந்தியாவின் செயல்பாடும் வாஜ்பாய் மீது மக்களிடையே செல்வாக்கை அதிகரித்திருப்பதாக பாஜக தலைவர்கள் நினைத்தனர்.
இதையடுத்து வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்க தீர்மானித்தனர். இதை வாஜ்பாயியிடமும் அவர்கள் கூறினர். ஆனால் வாஜ்பாயோ தனக்கு விருது வேண்டம் என்று திட்டவட்டமாக கூறி விட்டார். பிரதமர் பதவியில் இருப்பவர்கள் இதுபோல செய்யக் கூடாது என்று அவர் உறுதியாக கூறி விட்டார். அது பொருத்தமானதாக தனக்குத் தெரியவில்லை என்றும் வாஜ்பாய் கூறி விட்டார்.
அதன் பின்னர் வாஜ்பாய் ஊரில் இல்லாத சமயத்தில் விருதுக்கு வாஜ்பாயைப் பரிந்துரைக்க பல வழிகளில் பாஜக தலைவர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் அதை வாஜ்பாய் எப்படியாவது தடுத்து நிறுத்தி விடுவார் என்றார் டான்டன்.
3 முறை பிரதமராக இருந்தவர் வாஜ்பாய் இன்று அவருக்கு 90வது பிறந்த நாள். வாஜ்பாய்க்கு நேற்று மத்திய அரசு பாரதரத்னா விருதை அறிவித்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications