இந்தியப் பொருளாதாரம் குறித்துக் கவலை.ரிசர்வ் வங்கி கவர்னருக்கு 20 டாலர் நிதி அனுப்பிய குட்டிப்பாப்பா
டெல்லி: இந்தியப் பொருளாதாரம் குறித்து கவலையடைந்த ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது சேமிப்பான 20 டாலர் பணத்தை ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அனுப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று டெல்லியில் நடந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு, அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு போன்ற பல்வேறு சவால்கள் இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தன. அப்போது பங்குச்சந்தைகளும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.
இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற மத்திய அரசும், அப்போது புதிதாக ரிசர்வ் வங்கி கவர்னராக பதவியேற்ற ரகுராம் ராஜனும் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, டெல்லியைச் சேர்ந்த லைலா இந்திரா ஆல்வா என்ற சிறுமி இது தொடர்பாக கேள்விப்பட்டார். இத்தகவல் அவருக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. தன்னால் இயன்ற உதவியை தனது நாட்டிற்கு செய்ய வேண்டும் என அவர் முடிவெடுத்தார்.
சாங்ஸ்கிருதி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இந்திராவிடம் சேமிப்பு என்று 20 டாலர் பணம் மட்டும் தான் இருந்தது. உடனடியாக அதை நாட்டிற்கு நிதியுதவி அளிக்க முடிவெடுத்தார் இந்தியா.
அதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பினார் இந்திரா. அதில், ''நமது பொருளாதாரம் சந்தித்து வரும் சவால்களை கேள்விப்பட்டேன். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதையும் காண்கிறேன். நான் சென்ற முறை எனது பெற்றோர்களுடன் வெளிநாடு சென்றுவிட்டு திரும்பிய போது 20 டாலர்களை சேமித்து வைத்துள்ளேன். அதை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவியாக அளிக்க விரும்புகிறேன். நான் கொடுக்கும் இந்த சிறிய பணம் போதாது என்பது எனக்கு தெரியும்.'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
சிறுமியின் தேச பற்றைக் கண்டு ஆச்சர்யமடைந்த ரிசர்வ் வங்கி கவர்னர் அந்த பள்ளி மாணவிக்கு செப்டம்பர் 12 ஆம் தேதி பதில் கடிதம் அனுப்பினார். அதில், ''உங்களுடைய கடிதம் என் மனதின் ஆழத்தை தொட்டுவிட்டது. நமது நாட்டு பொருளாதாரத்திற்கு தற்போது சவாலான நேரம் என்பதை நான் அறிவேன். ஆனால் விரைவில் நமது பொருளாதாரம் மீட்சியடையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்ற உறுதியுடன் நீ அனுப்பிய 20 டாலரை திருப்பி அனுப்புகிறேன். தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க போதுமான அன்னிய செலாவணி கையிருப்பு ரிசர்வ் வங்கியிடம் உள்ளது.'' என்று ரகுராம் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் நடந்து முடிந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, தற்போது நாட்டின் பொருளாதாரம் சற்று வலுப்பெற்று, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பும் 310 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திரா மற்றும் ரகுராமின் இந்த இரு கடிதங்களும் நேற்று சாங்ஸ்கிருதி பள்ளியின் மேகசைனில் வெளியிடப்பட்டது.












Click it and Unblock the Notifications