இப்படித்தான் ஜெயலலிதாவும், ஷெட்டரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. அப்பவும் திறக்காத "ஷட்டர்"!
பெங்களூரு: டெல்லியில் இன்று தமிழகம்-கர்நாடக முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அழைப்புவிடுத்துள்ள நிலையில் கர்நாடக தரப்பில் முதல்வர் சித்தராமையாவும், தமிழகம் தரப்பில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்கிறார்கள். ஆனால் இதேபோன்று ஒரு பேச்சுவார்த்தையில், இரு மாநில முதல்வர்களும், 4 வருடங்கள் முன்பு பேசினர். அது தோல்வியில் முடிந்ததுதான் வரலாறு.
அப்போதும் உச்சநீதிமன்றம்தான் பேச்சுவார்த்தைக்கு ஆலோசனை கூறியிருந்தது. இதையடுத்து காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு மேற்கொள்ள பெங்களூரில் இந்த ஆலோசனை 2012, நவம்பர் மாதம் 29ம் தேதி நடைபெற்றது. அப்போதைய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக) மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் இரு மாநில அரசுகளுக்கு இடையே எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
ஒரு சொட்டு தண்ணீரும் கிடையாது
பேச்சுவார்த்தை நடைபெற்ற லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீரையும் தர முடியாது என ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாக ஸ்பீக்கர் மூலம் செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு சென்னை கிளம்பி சென்றுவிட்டார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்திருப்பதாக ஜெயலலிதா பின்பு செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
ஜெயலலிதா வேண்டுகோள்
இத்தனைக்கும், இந்த பேச்சுவார்த்தையின் போது, காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து ஜெகதீஷ் ஷெட்டரிடம் ஜெயலலிதா, விளக்கினார். கர்நாடகம் தண்ணீர் தந்தால் மட்டுமே சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்று ஷெட்டரிடம் கூறிய ஜெயலலிதா, இன்னும் 65 நாட்களுக்கு கட்டாயம் தண்ணீர் தேவை என்று கூறியுள்ளார்.
15 நாட்களாவது வேண்டும்
குறைந்தது 15 நாட்களுக்காவது 30 டி.எம்.சி தண்ணீரை விடுமாறு ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி மேட்டூர் அணையின் நிலவரத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஷெட்டரிடம் விளக்கி கூறினார். அப்போது 'மேட்டூர் அணையிலுள்ள 16 டி.எம்.சி.யில் 5 டி.எம்.சி குடிநீர் தேவைக்கானது, 5 டி.எம்.சி மீன்கள் உயிர்வாழ இருப்பு வைக்க வேண்டும், எஞ்சிய 6 டி.எம்.சி நீரை மட்டுமே பாசனத்துக்கு பயன்படுத்த முடியும்' என்று ஜெயலலிதா ஷெட்டரிடம் கூறினார்.
ஷெட்டரின் மறுப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தை கேட்ட பிறகு பேசிய கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக அணைகளில் 30 டி.எம்.சி. மட்டும் தான் நீர் இருப்பு உள்ளது என்று கூறினார். பெங்களூர் மற்றும் இதர நகரங்களின் குடிநீர் தேவைக்கு 20 டி.எம்.சி தண்ணீர் தேவை என்று ஜெயலலிதாவிடம் கூறிய ஷெட்டர், எஞ்சியுள்ள 10 டி.எம்.சி. கர்நாடகத்தில் சாகுபடி செய்துள்ள பயிருக்கே போதாது என்று விளக்கம் அளித்தார். கர்நாடகத்துக்கே போதாது என்ற நிலையில் தமிழகத்துக்கு நீர தர வாய்ப்பில்லை என்று ஷெட்டர் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார்.
அப்பவே அப்படி
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடகத்தின் யோசனையை ஜெயலலிதா ஏற்க மறுத்து விட்டதாக குற்றம்சாட்டினார். இப்படி இரு தரப்பும் குற்றம்சாட்டிக்கொள்ளவே அந்த கூட்டம் பயன்பட்டது. மீண்டும் உச்சநீதிமன்றமே கதியாக போனது தமிழகத்துக்கு. ஜெயலலிதா பங்கேற்ற போதே தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவா, எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அசைந்துவிடும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் இரு மாநில விவகாரங்களை கவனித்து வரும் பத்திரிகையாளர்கள்.