நேற்று வரை ஜெ. பெரியம்மா.... இன்று சொந்த அம்மா... தடாலடி பெங்களூரு அம்ருதா!
ஜெயலலிதாவை பெரியம்மா என உரிமை கோரிய பெங்களூரு அம்ருதான் இப்போது சொந்த அம்மா என தடாலடி காட்டுகிறார்.
Recommended Video
பெங்களூர்: ஜெயலலிதாவை தமது பெரியம்மா என கூறி வந்த பெங்களூரு அம்ருதா திடீரென சொந்த அம்மா என உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரை தமது சகோதரி என உரிமை கொண்டாடியவர் பெங்களூரு சைலஜா. ஜெயலலிதாவுடன் உடன் பிறந்தவர் அவரது அண்ணன் ஜெயக்குமார்தான். ஜெயக்குமாரின் மகள் தீபா,மகன் தீபக். இதுதான் ஜெயலலிதாவின் குடும்பம்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னட மீடியாக்களில் சைலஜா என்ற பெண் தம்மை ஜெயலலிதாவின் உடன் பிறந்த தங்கை என அழைத்துக் கொண்டார். ஜெயராமன், ஜெயலலிதாவுடன் தாம் 3-வதாக பிறந்ததாகவும் தாய் சந்தியா தம்மை ஆர்ட் டைரக்டராக இருந்த தாமோதரப்பிள்ளையிடம் கொடுத்து வளர்க்க சொன்னார் என்பது உள்ளிட்ட ஏகப்பட்ட கதைகளை அடுக்கிக் கொண்டே போனார் சைலஜா.
சைலஜா பேட்டிக்கு தடை
அத்துடன் மகள் அம்ருதாவுடன் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சித்தேன்; தம்மை டி.என்.ஏ. பரிசோதனை செய்தால் தாம் ஜெயலலிதாவின் தங்கை என்பது உறுதியாகும் எனவும் பேட்டி அளித்தார் சைலஜா. இதில் கோபமடைந்த ஜெயலலிதா, சைலஜாவின் பேட்டிகளை வெளியிட தடை விதிக்க நோட்டீஸும் அனுப்பியிருந்தார்.
ஒரேயடியாக மறுத்த தீபா
இந்த சைலஜா 2015-ம் ஆண்டு காலமானார். ஜெயலலிதா கடந்த ஆண்டு மறைந்த உடனேயே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வெளிச்சத்துக்கு வந்தார். அப்போது சைலஜா மகள் அம்ருதா, தாம் தீபாவுடன் இணைந்து செயல்படுவதாகவும் தீபாவை காணவில்லை; கடத்திவிட்டார்கள் என்றெல்லாம் பரபரப்பை கிளப்பினார். ஆனால் அம்ருதா யார் என தெரியாது என ஒரே போடு போட்டார் தீபா.
இன்று சொந்தம்மா ஜெ.
ஜெயலலிதா என்னுடைய பெரியம்மா; அவரது மரணத்துக்கு நீதி வேண்டும் என்றால் பொங்கியவர் அம்ருதா. அண்மையில் தமது உறவினர்களான லலிதா, ரஜினி ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து கூறியதன் அடிப்படையில் தம்மை ஜெயலலிதாவின் சொந்த மகள் என கூறிக் கொண்டு அண்மையில் ஜனாதிபதிக்கு அம்ருதா கடிதம் அனுப்பியிருந்தார்.
சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
கிட்டத்தட்ட சைலஜா சொல்லிவிட்டு போன கதைபோலவே அம்ருதாவும் சொல்லி வருகிறார். இதன் உச்சகட்டமாகத்தான் உச்சநீதிமன்றத்தின் கதவுகளையும் அம்ருதா தட்டியிருக்கிறார். ஆனால் அம்ருதாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளது.
என்ன செய்யும் கர்நாடகா ஹைகோர்ட்?
இதுவரை ஜெயலலிதாவை பெரியம்மா என கூறிவந்த அம்ருதா இப்போது என் சொந்த அம்மாதான் என சலங்கை கட்டிக் கொண்டு ஆடி வருகிறார். இதில் கர்நாடகா உயர்நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப் போகிறதோ?