யார் இந்த அயோத்தி “நாயர் சாப்”.. நேருவுடன் என்ன பகை? ராமர் கோயிலுக்கும் மலையாளிக்கும் என்ன தொடர்பு?
லக்னோ: அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்படும் நிலையில், “நாயர் சாப்” குறித்த தகவல்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. யார் அவர்? அவருக்கும் ராமர் கோயிலுக்குமான தொடர்பு என்ன என்று விரிவாக பார்ப்போம்.
அயோத்தியில் நாயர் சாப் என்றால் பிரபலம். நாயர் என்றால் மலையாளிகளின் சாதி பெயராச்சே.. இவர் எப்படி அயோத்தியில் பிரபலம் என்று தோன்றலாம். ஆம் அவர் மலையாளிதான். கடம்கலத்தில் கருணாகரன் நாயர் என்பதுவே அவரது முழு பெயர். கேரளாவை சேர்ந்த இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சி காலத்தில் பைசாபாத் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தவர். ஆலப்புழாவை அடுத்த குட்டநாடு பகுதியை சேர்ந்த கருணாநகரன் பிற்காலத்தில் அயோத்தியில் நாயர் சாப் என அழைக்கப்படுவதற்கு காரணம் பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி பிரச்சனைதான்.

1949 ஆம் ஆண்டு பைசாபாத் மாவட்ட ஆட்சியராக இவர் பதவியேற்றார். அடுத்த சில மாதங்கள் கழித்து பாபர் மசூதியில் ராமர் சிலை வைக்கப்பட்டது. அப்போது மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கோவிந்த் பல்லாப் பண்ட் ஆட்சியும் மத்தியில் ஜவஹர்லால் நேரு ஆட்சியும் நடைபெற்று வந்தது. பாபர் மசூதியில் ராமர் சிலை வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேருவே தலையிடுகிறார். மாவட்ட ஆட்சியர் நாயரிடம் மசூதியில் வைக்கப்பட்ட ராமர் சிலையை அகற்றுமாறு அவர் உத்தரவிடுகிறார்.
ஆனால், நாயர் பிரதமர் நேருவின் உத்தரவை ஏற்க மறுத்தார். இதன் காரணமாக நாயரை அரசு பணியிடை நீக்கம் செய்கிறது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நாயர் நீதிமன்றத்தை நாடுகிறார். அவருக்கு சாதகமாக தீர்ப்பு வருகிறது. மீண்டும் அவருக்கு பணி கிடைக்கிறது. ஆனால், தனது வேலையை ராஜினாமா செய்த அவர் சட்டப்படிப்பை முடித்தார். பிரதமர் நேருவின் உத்தரவையே ஏற்க மறுத்து ராமர் சிலையை பாபர் மசூதியில் இருந்து அகற்றாத காரணத்தால் நாயர் மீது அயோத்தி ராம பக்தர்கள் மீது மரியாதை பெருகியது.
உடனே அரசியலில் குதித்தார். அப்போது இருந்த ஜன சங்க் கட்சியில் இணைந்த அவர் 1967 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். நாயரின் மனைவி சகுந்தலாவும் ஜன சங்க் கட்சியில் இணைந்து கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் உத்தரப்பிரதேச சட்ட சபைத் தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார் சகுந்தலா.
1907 ஆம் ஆண்டு ஆலப்புழாவை பிறந்த கருணாகரன் நாயர் அயோத்தியில் நாயர் சாப் ஆனது இப்படித்தான். இப்போது ஆலப்புழாவை வசித்து வரும் நாயரின் மருமகன் பத்மனாப பிள்ளை ஊடகத்திடம் நாயரின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார். “எங்கள் குடும்பத்தில் அனைவரது பெயருக்கு பின்னால் பிள்ளை என்றே இருக்கும். கருணாகரனுக்கும் பிள்ளை என்றே இருந்தது. பள்ளியில் அதே பெயரில் வேறொரு மாணவர் இருந்ததால் ஆசிரியர் நாயர் என்று மாற்றிவிட்டார். அவர் இன்றும் அயோத்தி மக்கள் மத்தியில் நாயர் சாப் தான். சிறப்பு அழைப்பின் பேரில் எனது மகன் சுனில் பிள்ளை ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வார்.” என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications