ராம்ஜேத்மலானியை விட பெரியவரா இந்த ஹரீஷ் சால்வே?
டெல்லி: ராம்ஜேத்மலானி "வாலன்டியராக" ஜெயலலிதா வழக்கில் வந்து ஆஜரானவர். ஆனால் ஹரீஷ் சால்வே அப்படி இல்லை. ஏற்கனவே ஜெயலலிதாவுக்காக சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரத்தில் ஆஜரானவர். இந்த வழக்கில் ஏற்கனவே அனுபவம் உடையவர். எனவேதான் ஜெயலலிதா தரப்பு ஹரீஷ் சால்வேயை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதித்து அவரை சிறையில் அடைத்ததுமே நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை விமர்சித்து பேட்டி அளித்தார் ராம்ஜேத்மலானி. உடனே அவரை தெய்வமாக கருதிய அதிமுக தரப்பு அவரையே ஜாமீன் வழக்கில் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டது. அவரும் உடனே கிளம்பி ஓடி வந்து விட்டார்.
நீதிமன்றத்தில் அவர் சட்ட விவரங்களை நன்றாகத்தான் எடுத்து வைத்தார். ஆனால் கோர்ட்டும், நீதிபதிகளும் டென்ஷனாகும் அளவுக்கு அதிமுக வக்கீல்கள் செய்த அக்கப்போரால், பவானி சிங் பல்டி அடித்தும் கூட ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காமல் போய் விட்டது.
இந்த நிலையில் தற்போது வக்கீலை மாற்றிப் பார்க்க முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே ஜெயலலிதாவுக்காக சில வழக்குகளில் ஆஜரான அனுபவம் கொண்ட ஹரீஷ் சால்வேயைத் தொடர்பு கொண்டுள்ளது அதிமுக தரப்பு. லண்டனில் தற்போது தங்கியிருக்கும் சால்வே டெல்லி புறப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அனேகமாக நாளை அவர் டெல்லி வரக் கூடும்.
கடந்த 2011ம் ஆண்டு கர்நாடக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு செய்திருந்தார். அந்த வழக்கில் ஹரீஷ் சால்வேதான் ஆஜரானார். ஆனால் அப்போது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகியே தீர வேண்டும் என்று உத்தரவிட்டது.
அப்போது அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர், ஜெயலலிதா இந்த வழக்கை வேண்டும் என்றே தாமதப்படுத்த முயற்சிப்பதாக கண்டனமும் தெரிவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.
மேலும் நீதிபதி பண்டாரி தனது உத்தரவின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறுவதையெல்லாம் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்ற அவசியம் நீதிமன்றத்திற்குக் கிடையாது. வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே மனுதாரரின் கோரிக்கையில் இருப்பதாக உணர்கிறோம் என்றும் கடுமையாக கூறியிருந்தார்.
அந்த வழக்கில் ஆஜரான சால்வேதான் தற்போது ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கோரி ஆஜராகப் போகிறார்..!