மம்தாவை இடைத்தேர்தலில் வீழ்த்த... பவானிபூரில் குவியும் பாஜக நிர்வாகிகள்.. வெல்லப்போவது யார்..?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
பொதுத்தேர்தலில் வீழ்த்தியது போல் இடைத்தேர்தலிலும் அவரை வீழ்த்த பாஜக வியூகம் அமைத்து கடும் உழைப்பை கொட்டி வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு பாஜக நிர்வாகிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல்
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவினார். இருப்பினும் பெருவாரியான இடங்களை திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியதால் மம்தா மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தனது தோல்வி திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சதி என்று மம்தா குற்றஞ்சாட்டினார்.

தொகுதி காலி
ஆனால் அதனை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் நியாயமான முறையிலேயே தேர்தலும், வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றதாக பதில் அளித்தது. இதனிடையே 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக அவர் பதவியேற்க வேண்டும் என்ற சூழல் காரணமாக இப்போது பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளார். மம்தாவுக்காக மேற்கு வங்க மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் சோபந்தேவ் சட்டோபாத்யாய் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சதி வலை
இதனால் காலியாக அறிவிக்கப்பட்ட பவானிபூரில் மம்தா போட்டியிடுகிறார். இந்த தொகுதியுடன் சேர்த்து சாம்சர்காஞ்ச், ஜாங்கிபூர் என 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சேத்லா என்ற இடத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மம்தா, சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நடந்த விதம் இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம் என்றும் பொதுத்தேர்தலின் போது 1000 குண்டர்கள் நந்திகிராமில் முகாமிட்டு சதி வலை பின்னியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் வியூகம்
இதனிடையே இடைத்தேர்தலிலும் மம்தா தோல்வியை தழுவ வேண்டும் என்பதில் பாஜக தலைமை மிகத் தீவிரமாக உள்ளது. இதனால் இதற்கான வியூகத்தை வகுத்து தேர்தல் பணிகளை கண்ணும் கருத்துமாக கையாண்டு வருகிறது. மம்தா ஒரு வேளை இடைத்தேர்தலில் தோற்றால் அது அவரது அரசியல் வாழ்க்கையில் பெரிய சரிவாக கருதப்படும். மேலும், தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருப்பதும் கேள்விக்குறியாகும். இதனால் வாழ்வா சாவா என்கிற அளவுக்கு பவானிபூர் இடைத்தேர்தல் மம்தாவுக்கு அமைந்துள்ளது.

முக்கியத்துவம்
மம்தாவுக்கு ஆதரவாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பவானிபூர் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடவிருக்கின்றனர். ஆனால் அவர்களின் முயற்சிகளை முறியடித்து மம்தாவை தேர்தலில் வீழ்த்தும் நோக்கில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் பவானிபூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் இந்த தொகுதி இடைத்தேர்தலும், முடிவும் தேசிய அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications