"வாய்ப்பில்லை ராஜா.." குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு நோ சான்ஸ்.. அடித்து சொல்லும் அமைச்சர் அமித் ஷா
காந்தி நகர்: குஜராத் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
குஜராத்தில் இப்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இப்போது பூபேந்திர படேல் முதல்வராக உள்ள நிலையில், அங்கு இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. பின்னர் டிச. 8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

குஜராத்
அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இரு கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் இறங்கி வேலை செய்ததில் பாஜகவால் 99 இடங்களில் மட்டுமே வென்றது. இந்தச் சூழலில் தான் இந்தத் தேர்தலில் மீண்டும் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக களமிறங்குகிறது.

தேர்தல்
குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால், பாஜக இதைக் கவுரப் பிரச்சினையாகவே பார்க்கிறது. இடையில் இதில் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கி உள்ளது. பஞ்சாபில் ஆட்சியைக் கைப்பற்றிய தேம்புடன் ஆம் ஆத்மி களமிறங்குகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். இந்தச் சூழலில் அமித் ஷா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் குஜராத்தில் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து உள்ளார். இந்து குறித்த கருத்துகள் தொடங்கி இலவச சேவைகள் வரை, கெஜ்ரிவால் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். குஜராத்தில் அதிகரித்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கைக் கண்டு பாஜக திணறுவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

அமித் ஷா
அதாவது குஜராத்தில் மும்முனை போட்டி என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகவே மறுத்து உள்ளார். இது குறித்து அமித் ஷா, "இது பார்க்க ஒரு மும்முனை போட்டி போல் இருக்கலாம்.. ஆனால் முடிவுகள் வெளிவரும் போது, இது மும்முனை போட்டியா இல்லையா என்பது தெரிய வரும். கடந்த காலங்களில், குஜராத் மக்கள் எப்போதும் இங்கு இரு முனை போட்டி தான் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

கடும் போட்டி
பிரதமர் மோடியின் செல்வாக்கை நம்பியே குஜராத்தில் பாஜக களமிறங்குகிறது. இருப்பினும், அங்குக் குஜராத்தில் பாஜக மீது அதிருப்தி நிலவுவதாகவும் இதனால், பாஜக தோல்வியைத் தழுவது உறுதி என்றும் காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் ராகுல் காந்தியும் கலந்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications