தினகரன் சிக்குவது தெரிந்தே மல்லுக்கட்டிய தம்பிதுரை- டெல்லியில் ஏப்.12ல் நடந்தது இதுதான்!
தினகரன் சிக்கப் போகிறார் என்பதை உணர்ந்தே மத்திய அரசுடன் மல்லுக்கட்ட வேண்டாம் என தம்பிதுரை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
டெல்லி: டிடிவி தினகரனுக்கு டெல்லி குறிவைத்துவிட்டது என்பதை தெரிந்துதான் நீங்க அடக்கி வாசியுங்க என அன்பாக மல்லுக்கட்டினார் தம்பிதுரை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
காவிரி உள்ளிட்ட தமிழக பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக அதிமுக எம்பிக்களுடன் டெல்லிக்கு படையெடுத்துப் பார்த்தார் தம்பிதுரை. ஆனால் ஒருபோதும் பிரதமர் மோடி, தம்பிதுரை அண்ட்கோவை சந்திக்க நேரம் ஒதுக்கவே இல்லை.
இந்த நிலையில் திடீரென கடந்த 12-ந் தேதியன்று பிரதமர் மோடியை சந்திக்க தம்பிதுரைக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது தம்பிதுரை அண்ட்கோவை ரொம்பவே மகிழ்ச்சிப்படுத்தியது.
சரண்டர் தம்பிதுரை
இச்சந்திப்பில் தம்பிதுரை எடுத்த எடுப்பிலேயே, மத்திய அரசு சொல்வதை நாங்கள் அப்படியே கேட்டுக் கொள்கிறோம். எங்கள் மீதான வழக்குகளை மட்டும் துரிதப்படுத்தாமல் இருந்தால் உதவியாக இருக்கும் என கெஞ்சியிருக்கிறார். இப்படி தடாலடியாக தம்பிதுரை சரணடைந்ததை பிரதமர் மோடியும் எதிர்பார்க்கவில்லையாம்.
சிக்னல் தந்த டெல்லி
இதைத் தொடர்ந்து, நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை அனைத்தும் என்பது சட்டப்படியானது... அதை நீங்க சட்டரீதியாகவே நீங்க எதிர்கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்திருக்கிறார் மோடி. பிரதமர் மோடியின் இந்த அட்வைஸ் ஏதோ ஒன்றை குறிப்பாக உணர்த்துவதாக உணர்ந்திருக்கிறார் தம்பிதுரை./
தினகரனுக்கு அட்வைஸ்
இதையடுத்தே சென்னைக்கு பறந்துவந்து தினகரனிடம் மத்திய அரசுடன் மல்லுக்கட்டாமல் இருங்கள்.. விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்யலாம் என கூறியிருக்கிறார். ஆனால் தினகரனோ விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய முடியாது என கறாராக இருந்திருக்கிறார்.
டெல்லி அதிருப்தி
ஏற்கனவே தளவாய்சுந்தரம் மூலம் தினகரன் தரப்பின் ஒவ்வொரு நகர்வையும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது மத்திய உளவுத்துறை. இந்த நிலையில் தம்பிதுரை மூலம் நாம் சிக்னல் கொடுத்தும் தினகரன், விஜயபாஸ்கர் விவகாரத்தில் அடம்பிடிக்கிறாரே என அதிருப்தியில் இருந்து வந்தது டெல்லி.
புலம்பும் தம்பிதுரை
இந்த நிலையில்தான் தற்போது தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்து வசமாக பொறியில் சிக்கிக் கொண்டுள்ளார் தினகரன். இதையெல்லாம் எதிர்பார்த்துதான் அன்றே நான் தினகரனிடம் எச்சரித்தேன்...அவர்தான் கேட்கவில்லை என கூறி வருகிறராம் தம்பிதுரை.