சோட்டா ராஜனுக்கு பதில் சயனைடு மோகன் கைது என செய்தி வெளியானது ஏன் தெரியுமா?
டெல்லி: இந்தியாவை கலக்கிய நிழலுலக தாதா, சோட்டா ராஜன், இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், கைதானது, கர்நாடகாவை சேர்ந்த சயனைடு மோகன் என்று ஒரு தகவல் டிவி மீடியாக்களில் பரவியது. இதன்பிறகு சிபிஐ இயக்குநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் இதில் தலையிட்டு, கைதானது சோட்டா ராஜன்தான் என்று தெளிவுபடுத்தினர். இந்த குழப்பத்திற்கு காரணம், சோட்டா ராஜனிடமிருந்த போலி பாஸ்போர்ட்தான்.

கர்நாடக பெயர்
அந்த பாஸ்போர்ட்டில், சர்நேம் என்ற இடத்தில் குமார் என்றும், கிவன்நேம் என்ற இடத்தில் மோகன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் வேறு தரப்பட்டிருந்தாலும், பாஸ்போர்ட்டில் இருப்பது சோட்டா ராஜன் போட்டோதான்.

பாஸ்போர்ட்
சோட்டா ராஜனை கைது செய்ததும் இந்தோனேஷியாவின் இன்டர்போல் போலீசார் அவரிடமிருந்து பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர். பாஸ்போர்ட்டில் இருந்த பெயரை வைத்து இந்தோனேஷிய ஊடகங்கள், அவரை மோகன் என்றும், கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும் கூறி செய்தி வெளியிட்டன.

செய்தி வெளியீடு
இந்த செய்தியை வைத்துதான், இந்தியாவிலுள்ள சில தொலைக்காட்சி ஊடகங்களும், கைதானது கர்நாடகாவை சேர்ந்த மோகன் என்று குறிப்பிட்டன. மோகன் என்ற பெயரில் கர்நாடகாவின் பிரபல குற்றவாளிகள் யார் உள்ளனர் என்று உள்ளூர் நிருபர்கள் விசாரித்தபோது, சயனைடு மோகன் என்பவர் 20 கொலை செய்தவர் என்ற தகவல் வெளியானது. எனவே அவர்தான் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

விசாரிக்கவில்லை
ஆனால் அந்த ஊடகங்கள் இரு விஷயத்தை மறந்துவிட்டன. முதலாவது, இன்டர்போல் தேடும், நிழலுலக தாதா தனது சொந்த பெயரில் பாஸ்போர்ட் வைத்திருக்க மாட்டார், எனவே பாஸ்போர்ட் பெயரை வைத்து ஒரு முடிவுக்கு வரக்கூடாது. 2வதாக, ஊடகங்கள் கூறிய சயனைடு மோகன், இந்திய சிறையில் இருந்து தப்பி சென்றாரா இல்லையா என்பதை அவரை உறுதி செய்யாமல் செய்தி ஒளிபரப்பின. ஒருவழியாக சிபிஐ மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மோசமான கொலையாளி
யார் இந்த சயனைடு மோகன்? கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த மோகன், மொத்தம் 20 பெண்களிடம் திருமண ஆசை காட்டி வீட்டைவிட்டு ஓடிவரச் செய்து அவர்களுக்கு சயனைடு கொடுத்து கொலை செய்து, நகை, பணத்தை அபேஸ் செய்தவர். இக்குற்றத்திற்காக அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications