எடியூரப்பாவின் பச்சை துண்டுக்கு பின்னால் ஒரு கதையே இருக்கு பாருங்க...
எடியூரப்பா பதவியேற்றபோது எதற்காக பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகத்தின் முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றபோது எதற்காக பச்சை துண்டு அணிந்திருந்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில் 104 இடங்களை பெற்ற பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து உரிமை கோரியது.
அதுபோல் காங்கிரஸ்- ஜேடிஎஸ் 115 எம்எல்ஏக்களுடன் குமாரசாமியும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். எனினும் ஆளுநரோ எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார்.
விடிய விடிய வழக்கு
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸும் ஜேடிஎஸ்ஸும் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கை அவசர வழக்காக விடிய விடிய நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது எடியூரப்பா முதல்வராக பதவியேற்பதை தடுக்க முடியாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சவாரி போட்ட முதல்வர்
தென்னிந்தியாவில் சவாரி போட்டு கொண்டு முதல்வராக எடியூரப்பா 2-ஆவது முறை பதவியேற்றார். அவர் தோளில் பச்சை துண்டும் அணிந்திருந்தார். அவர் பதவியேற்கும் போது கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரில் உறுதி மொழி ஏற்றார்.
விவசாயிகளுக்காக...
விவசாய குடும்பத்தை சேர்ந்த எடியூரப்பா, விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ. 1 லட்சம் கோடி பயிர் கடனை தள்ளுபடி செய்வோம் என்று விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுப்படுத்தும் வகையிலேயே அவர் பச்சை துண்டு அணிந்திருந்தார்.
விவசாயிதான்
இதுகுறித்து எடியூரப்பா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறுகையில் கடந்த 45 ஆண்டுகளாக ,இன்று வரை நான் தினமும் விவசாய நிலத்துக்கு செல்வேன். எங்கள் தோட்டத்தில் தென்னை மற்றும் மாமரங்கள் உள்ளன. காய்கறிகளும், நெற்பயிரும் வைத்துள்ளோம். எனது சொந்த ஊரான ஷிகாரிபுராவுக்கு சென்றால் என்னுடைய வயலில் சிறிது நேரம் இருந்துவிட்டுதான் திரும்புவேன். நானும் எனது மகனும் சேர்ந்தே விவசாயத்தை பார்த்துக் கொள்கிறோம் என்றார்.
விவசாயிகள் மீது உறுதிமொழி
2008-ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா அன்றும் பச்சை துண்டு அணிந்திருந்தார். அதுபோல் விவசாயிகள் மற்றும் கடவுளின் பெயரால் பதவியேற்றார். விவசாயிகளுக்கென்று தனி பட்ஜெட்டை முதலில் அமைத்தது எடியூரப்பா என்பது சிறப்பு.