10x10 அறையில் வேட்பாளர்கள் அறிவிப்பு... மம்தாவுக்கு தொடர் வெற்றியை பரிசளித்து வரும் லக்கி ரூம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 291 தொகுதிக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட மம்தா நந்திகிராம் தொகுதியில் நிற்பதாக அறிவித்துள்ளார்.
மம்தாவின் இந்த அறிவிப்பை விட, அவர் அறிவிப்பு வெளியிட்ட இடம்தான் இப்போது அனைவரிடமும் பேசும்பொருளாக மாறியுள்ளது.
மம்தா அறிவிப்பு வெளியிட்ட 10x10 அறை சாதாரண அறை இல்லையாம். அவரை தொடர்ந்து முதல்வராக பதவியில் வைத்து அழகு பார்க்கும் மிகவும் ராசியான அறையாம்.

பாஜக-திரினாமுல் போட்டி
தமிழகத்தைப்போல் மேற்கு வங்க தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது. அங்கு பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் திரிணாமுல் தேர்தல் பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிக்கு வேட்பாளர்கள் பட்டியலை கொல்கத்தாவில் அதிரடியாக அறிவித்தார் திரிணாமுல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி.

ராசியான 10x10 அறை
மம்தாவின் வலதுகரமாக இருந்து கருத்து வேறுபாட்டால் தற்போது பாஜக பக்கம் ஒதுங்கி இருக்கும் சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துளளார் மம்தா. மம்தாவின் இந்த அறிவிப்பை விட, அவர் அறிவிப்பு வெளியிட்ட இடம்தான் இப்போது அனைவரிடமும் பேசும்பொருளாக உள்ளது. 10 அல்லது 15 பேர் இருக்கும் அளவு கொண்ட 10x10 அறையில், சுமார் 50-க்கும் மேற்பட்ட நிருபர்கள் கையில் கேமராக்களுடன் நெரிசலில் நிற்க கூட முடியாமல் சூழ்ந்து இருக்க அவர்கள் முன் ஜோராக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளார் மம்தா.

மம்தாவை முதல்வராக்கும் அறை
ஒரு மாநிலத்தையே ஆளும் பெரிய கட்சிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த ஒரு பெரிய கட்டிடம் கூடவா இல்லை? என்று நீஙகள் கேட்பது என் காதில் விழுகிறது. ஆனால் இங்குதான் சூட்சுமம் இருக்கிறது. மம்தா அறிவிப்பு வெளியிட்ட 10x10 அறை சாதாரண அறை இல்லையாம். அவரை தொடர்ந்து முதல்வராக பதவியில் வைத்து அழகு பார்க்கும் மிகவும் ராசியான அறையாம். அதனால்தான் எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் அங்குதான் மம்தா வைத்துக் கொள்வார்.

தோல்வியே கிடையாது
என்னப்பா! இந்த காலத்துல ராசி, பாசினு பேசிக்கிட்டு இருக்கனு நீங்க சொல்றதும் என் காதில் விழுகிறது.ஆனால் 2011 மற்றும் 2016 தேர்தல் என அடுத்தடுத்து வெற்றி பெற காரணகர்த்தாவாக இந்த அறை இருந்துக்குனு மம்தா நம்புகிறாராம். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த அறையில் இல்லாமல் வேறு பகுதியில் வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் மம்தா. ஆனால் இந்த தேர்தலில் மம்தாவுக்கு 18 தொகுதிகளே கிடைத்தன. பாஜக 22 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.

பத்திரிகையாளர் சந்திப்பு இங்குதான்
அதன்பின்புதான் இந்த 10x10 அறையின் முக்கியத்துவம் குறித்து மம்தா புரிந்து கொண்டாராம். அதன்பின்பு அவர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்த அறையை விட்டு வேறு எங்கும் போவதில்லையாம். மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது பாஜகவின் லட்சியம். பாஜகவின் லட்சியத்தை இந்த 10x10 அறை சிதைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications