மக்களின் உடல் நிலை, கல்வி பற்றி மோடி அரசுக்கு எந்த அக்கறையுமில்லையா?
'பட்ஜெட் என்பது வெறும் சடங்குதான். அந்த சடங்கையும் கூட கார்ப்பொரேட்கள் நலனுக்காகவே செய்வோம்' என்பதில் தெளிவாக இருக்கிறது மோடி அரசு.
மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்குத்தான் முதலிடம் தருவோம் என்று காவியின் மீது சத்தியம் அடித்தவர்கள், இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் 15 சதவீதமும், கல்வித் துறைக்கான ஒதுக்கீட்டை 16 சதவீதமாகவும் குறைத்திருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் கல்வித் துறைக்கு ஒவ்வொரு நாடும் தனது மொத்த வருவாயில் (ஜிடிபி) 4.9 சதவீதத்தை ஒதுக்குகின்றன. ஆனால் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒதுக்குவது 3.3 சதவீதம்தான். இப்போது அதிலும் 16 சதவீதம் கட்..!
ஒவ்வொரு 5 கிமீ தூரத்துக்கும் ஒரு பள்ளிக்கூடம் இருக்கும்படி செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ஆனால் இப்போது ஒதுக்கியுள்ள நிதியில் 10 கிமீட்டருக்கு ஒரு பள்ளிகூட சாத்தியமில்லையே!
பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அறிவோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் சராசரி கல்வி 74 சதவீதம்தான்.
நாடு முழுவதும் சுகாதாரக் கேடுகள் அதிகரித்து வரும் சூழலில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கும் நிதியில் ரூ 5,897.5 கோடியை குறைத்திருக்கிறார் நிதியமைச்சர்.
ஆனால் பெரும் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக்கியுள்ளது மோடி அரசு (அவங்க கண்ணுல தூசி விழுந்திடக் கூடாதே...) 'தேர்தலின் போது அவர்களிடம் வாங்கியதைத் திருப்பித் தரும் மோடியின் நன்றி விசுவாசமே இந்த பட்ஜெட்டில் அப்பட்டமாகத் தெரிகிறது' என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications