'ஆங்கிலம் வேணாம்'.. மருந்துகளின் பெயரை இந்தியில் எழுதலாமே? ம.பி முதல்வருக்கு வந்த திடீர் ஐடியா!
போபால: டாக்டர்கள் வழங்கும் மருந்து சீட்டுக்களில் ஏன் ஆங்கில வார்த்தைக்கு பதிலாக இந்தியில் எழுதக்கூடாது என பாஜக தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான சிவ்ராஜ் சிங் ஐடியா கொடுத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள பாரத் பவனில் இந்தி வியக்யன் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

தேசிய மொழி குறித்த விழிப்புணர்வு
நான் அதிகம் சொல்லப்போவது இல்லை.. ஏனென்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது. அதன் விளைவுதான் இந்தி பல்கலைக்கழகம். இது வெற்றி அடைந்ததா?.. இல்லையா?.. என்பது வேறு விஷயம். ஆங்கிலத்திற்கு எதிராக அரசு இல்லை. ஆனால், தேசிய மொழி குறித்த விழிப்புணர்வு அவசியம். ஆங்கிலம் இன்றி எந்த வேலையும் முடிக்க முடியாது என்ற மனநிலை தவறானது.

யார் ஆங்கிலம் பேசுகிறார்கள்?
ஆங்கிலம் சரியாக வரவில்லை என்று பல மருத்துவ மாணவர்கள் படிப்பை விட்டு வெளியேறுவதை நான் பார்த்து இருக்கிறேன். பல அயல்நாடுகளில் உள்ளூர் மொழிகளிலேயே அனைத்து பணிகளும் நடைபெறுகின்றன. அந்த நாடுகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் சீனா போன்ற நாடுகளில் யார் ஆங்கிலம் பேசுகிறார்கள்? நாம் அடிமைகளாகிவிட்டோம்.

இந்தியில் தான் பேசினேன்
நான் அமெரிக்கா சென்ற போது இந்தியில் தான் பேசினேன். ஆங்கிலத்தில் பேசியவர்களை விட எனக்கு அதிக பாரட்டுக்கள் கிடைத்தது. இந்தியில் மருத்துவ படிப்பு என்று நான் அறிவித்த பலர் வாய் விட்டு சிரித்தனர். தற்போது அதை நாம் செய்து காட்டியிருக்கிறோம். இது ஒரு சமூக புரட்சி. சாத்தியம் இல்லாதது எதுவுமே இல்லை'' என்றார். மேலும் அவர் பேசுகையில், மருத்துவ சீட்டுக்களில் மருந்துகளின் பெயரை இந்தியில் ஏன் எழுதக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியில் எழுதுவதில் என்ன பிரச்சினை
தொடர்ந்து அவர், 'ஸ்ரீஹரி என மேலே எழுதிவிட்டு மருந்துகளின் பெயரை எழுத வேண்டும் என்றும் குரோசின் என்ற மருந்தை எழுதினால், அதை இந்தியில் எழுதுவதில் என்ன பிரச்சினை என்றும் சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பினார். நாட்டிலேயே முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு இந்தியில் மூன்று பாடங்கள் (அனடாமி, சைக்காலஜி, பையோ கெமஸ்ட்ரி) கற்பிக்கப்பட உள்ளன.

அமித்ஷா தொடங்கி வைக்கிறார்
சோதனை அடிப்படையில் தொடங்கப்படும் இந்த திட்டம் காந்தி மெடிக்கல் கல்லூரியில் இருந்து தொடங்கி வைக்கப்படுகிறது. நடப்பு ஆண்டு முதலே இந்தியில் கற்பிக்கப்பட உள்ளது. இந்த 3 பாடங்களுக்கான பாடப்புத்தங்களின் இந்தி மொழி பெயர்ப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட உள்ளார்.












Click it and Unblock the Notifications