பாஜகவை ஆதரித்து ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? தேசியவாத காங். காட்டம்!
மும்பை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்பது என்பது தற்கொலைக்கு சமமானது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளிவர இருக்கின்றன. அதற்கு முன்பு வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்துமே பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன.

பாஜக அணிக்கு ஆதரவு?
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸும் கூட பாஜக அணிக்கு தாவும் என்று கூறப்பட்டு வந்தது.

பிரபுல் பட்டேல் ஆதரவு
இதை உறுதிப்படுத்தும் வகையில் அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரபுல் பட்டேல், பாஜகதான் தனிப்பெரும் கட்சியாக வெல்லும். மத்தியில் நிலையான வலிமையான ஆட்சி அமைவதை பார்க்கலாம் என்றார்.

கட்சி மாறட்டும் பிரபுல்
இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி, அணி மாறுகிறது என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் பிரபுல் பட்டேல் மட்டும் பாஜக அணிக்கு போகலாம்.. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிச்சயம் பாஜகவை ஆதரிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.

ஏன் தற்கொலை செய்யனும்?
இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜிதேந்திரா, மோடியை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. நிச்சயம் எப்போதும் ஆதரிக்க மாட்டோம். எங்கள் மாநில தேர்தல்களையும் நாங்கள் பார்க்க வேண்டும். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கிறோம். பிறகு ஏன் நாங்கள் பாஜகவை ஆதரித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கொந்தளித்திருக்கிறார்.

பாஜகவை என்சிபி ஆதரிக்காது
தற்போதைய நிலையில் தேசியவாத காங்கிரஸ், மகாராஷ்டிரா மாநில அரசியலைக் கருத்தில் கொண்டு பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்காது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications