காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு பின் வாங்கியது ஏன்? சுப்ரீம்கோர்ட் கேள்வி
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு பின்வாங்கியது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007ல் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இவற்றின் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் கர்நாடக அரசின் வாதம் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து, கேரள அரசு வாதம் முன் வைத்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடந்து வருகிறது.
நேற்று தமிழகம் தனது வாதத்தை தொடங்கியது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே வாதங்களை முன்வைத்து வருகிறார்.
இன்று வாதத்தை தொடர்ந்தார் அவர். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து கர்நாடகாவுக்கு சாதகமாக நடந்து வருகிறது என்று தமிழகம் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக ஒப்புக்கொண்டு பிறகு மத்திய அரசு பின்வாங்கியதாக தமிழகம் குற்றம்சாட்டியது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முதலில் ஒப்புக்கொண்ட மத்திய அரசு பிறகு ஏன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் இருந்து பின் வாங்கியது என கேள்வி எழுப்பினர்.
நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் ஆஜராகியிருந்தார். தாங்கள் அவ்வப்போது எழுப்பும் கேள்விகளை குறித்துக்கொள்ளுமாறும், அதற்கு பிறகு உரிய விளக்கங்களை தந்தேயாக வேண்டும் என்றும் நீதிபதிகள் அவரிடம் தெரிவித்தனர். இதனால், மத்திய அரசு வழங்க உள்ள பதில் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.