தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வேன் என்பதா? ரணில் விக்கிரமசிங்கேவுக்கு காங். கண்டனம்
டெல்லி: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக் கொல்வேன் என்கிற ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவோம் என்று மறைமுகமாக அவர் கூறினார். ‘என் வீட்டுக்குள் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றால், அவரை நான் சுடலாம். அதில் அவர் கொல்லப்படலாம். ஆனாலும், அப்படி செய்ய சட்டம் எனக்கு அனுமதி அளிக்கிறது' என்று ரணில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி சமூக வலை தளத்தில் எழுதி இருப்பதாவது:
ஆமாம், மிஸ்டர் ரனில், உங்கள் வீட்டில் ஊடுருபவர்களை நீங்கள் சுடலாம். ஆனால், பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் அப்பாவிகளை நீங்கள் சுட்டால், நீங்களும் சுடப்பட வேண்டியவர். கொலை குற்றத்துக்காக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஊடுருபவர்களையும், வழிதவறி செல்லும் மீனவர்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாமல், சுடுவது ஒன்றே தீர்வு என்று கருதினால், ரணில் விக்ரமசிங்கே, பிரதமராக இருக்க தகுதி இல்லாதவர்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், அண்டை நாடுகள் இந்தியாவை மிரட்டுகின்றன. அதற்கு அந்நாடுகளுக்கு மன உறுத்தல் இல்லாவிட்டால், இந்தியாவுக்கு மோசமான நாட்கள் நடப்பதாக அர்த்தம். 56 அங்குல மார்பு வேண்டும் எனக் கூறிய பிரதமர் மோடி, அதை வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு பயன்படுத்த மாட்டார் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அபிஷேக் சிங்வி எழுதி உள்ளார்.












Click it and Unblock the Notifications