சபரிமலை கோவில் விவகாரத்தில் கேரளா அரசு தலையிடாது- உம்மன்சாண்டி
திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் நடைமுறையில் கேரள அரசு தலையிடாது என்று கேரளா மாநில உம்மன் சாண்டி விளக்கம் தெரிவித்து உள்ளார். மாநில அரசு தன்னுடைய நிலைப்பாட்டை ஏற்கனவே கோர்ட்டில் தெரிவித்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் 10 வயது சிறுமிகள் முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சென்று வழிபடுவதற்கு தடை உள்ளது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ‘யங் இந்தியா' வக்கீல்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில், ‘ஹேப்பி டூ பிளீட்' என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் தன்னை இணைத்துக் கொண்டு உள்ளது.
இதுபற்றிய விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது தன்னார்வ தொண்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் பாரம்பரியம், நம்பிக்கை என்ற பெயரில் சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.

இது அரசியல் சாசனம் வகுத்த கொள்கைகளுக்கு எதிரானது. எனவே இந்த சமூக கொடுமையை நீக்கவேண்டும் என்று வாதிட்டார். பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக் காட்டிய அவர், கோவில் போன்ற பொதுவான வழிபாட்டுத் தளங்களில் பெண்கள் நுழைவதை தடுப்பது தங்களுடைய உரிமை என்று கோவில் நிர்வாகம் கூற முடியாது. பாலின பாகுபாடின்றி அனைத்து கோவில்களிலும் வழிபட இந்துக்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாலின சமத்துவம் என்பது அரசியல் சாசனம் வழங்கிய உரிமை ஆகும். எனவே கோவில் நிர்வாகம், கோவிலுக்குள் பெண்கள் நுழைவது மத சம்பந்தமான விவகாரம் என்றும் அதில் தங்களுக்கு உரிமை உள்ளது எனவும் கூற இயலாது என்று குறிப்பிட்டனர். பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
உம்மன் சாண்டி விளக்கம்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளநிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளித்து உள்ள கேரளா முதல்வர் உம்மன் சாண்டி, சபரிமலை கோவில் நடைமுறையில் கேரள அரசு தலையிடாது என்று கூறிஉள்ளார். "மத நம்பிக்கைகள், பாரம்பரிய வழக்கங்களில் கேரள அரசு தலையிடாது. பெண்கள் அனுமதி விவகாரத்தில் சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுப்பதே சரியானது என்றார். மாநில அரசு தன்னுடைய நிலைப்பாட்டை ஏற்கனவே கோர்ட்டில் தெரிவித்துவிட்டது என்றும் உம்மன் சாண்டி கூறிஉள்ளார்.












Click it and Unblock the Notifications