தினசரி புதிய உச்சம் தொடும் பெட்ரோல், டீசல் விலை... ஜிஎஸ்டியில் சேர்க்கும் அறிவிப்பு வருமா?
பெட்ரோல், டீசல் விலை தினசரி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
சென்னை : பெட்ரோல், டீசல் விலை தினசரி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்றும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் உயர்ந்து ரூ. 75.77க்கும், டீசல் விலை 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 67.62க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசுகளின் வாட் வரிக்கு முடிவு கட்டும் விதமாக ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை சேர்க்கும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறது.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்ந்துவரும் நிலையில், இன்றும் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.
இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சென்னையில் இன்று பெட்ரோலின் விலை 14 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ. 75.77 ஆகவும், டீசலின் விலையில் 12 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ. 67.62 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் மக்களிடையே விலை உயர்வை திணிக்கின்றன. மத்திய அரசு தனது பங்கிற்கு கலால் வரியை குறைத்தும் பெட்ரோலியப் பொருட்கள் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரியை குறைக்குமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் வரி வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் விடாப்பிடியாக உள்ளன. இதனால் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் விருப்பம் தெரிவித்தனர். எனினும் கடைசியாக நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படாததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மக்களின் சுமையை குறைக்க ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வர வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் நிதித்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.